கொரோனாவை குணப்படுத்துவதில் சக்சஸ்.. தமிழகத்தில் நடைமுறைக்கு வருகிறது பிளாஸ்மா சிகிச்சை- விஜயபாஸ்கர்
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
2 கோடி ரூபாய் செலவில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட உள்ளது. இது இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய பிளாஸ்மா வங்கியாகும்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
37 மாவட்டத்திலும் பரவியது கொரோனா.. 9 மாவட்டங்களில் 100ஐ கடந்த பாதிப்பு.. முழு விவரம்
பரிசோதனை வெற்றி
சென்னையில் சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளித்ததில் 18 நோயாளிகள் குணமடைந்தனர். எனவே இந்த சிகிச்சையை பரவலாக்குவதற்கு முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். பிளாஸ்மா தானம் செய்வோர் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம்
உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் போன்றோர் பிளாஸ்மா தானம் செய்யக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை வழங்கி ஒரு நோயாளி குணம் அடைந்து இருக்கிறார். எனவே, திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் பிளாஸ்மா சிகிச்சை சோதனை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. நெல்லை, கோவை, ஸ்டான்லி, ஓமந்தூரார் உட்பட பல அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா தானம் செய்வோர் செய்யலாம்.
எதிர்ப்பு சக்தி
கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு அது நோயாளிகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று குணமடைகிறார்கள். குணமடைந்த பிறகு 14 நாட்கள் கழித்து ஒருவர் பிளாஸ்மா தானமளிக்க தகுதியுடையவர் ஆவார்.
வெற்றிகரமான சிகிச்சை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை நேரடியாக எந்த ஒரு மருந்தும் இல்லாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிப்பதை டெல்லியில் உணர்ந்துள்ளனர். இந்த நிலையில்தான் சென்னையில் முதலில் பரிசோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டது. அதில் வெற்றி கிடைத்துள்ளது. டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் சிகிச்சை வரை சென்ற நிலையிலும், பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.