கொடநாடு.. சேலம் இளங்கோவன் உயிருக்கு ஆபத்து! தற்கொலை செய்ய கூடும்.. முஸ்லிம் லீக் முஸ்தபா பகீர்
சென்னை: கொடநாடு கொலை-கொளை சம்பவத்தில் சேலம் இளங்கோவனை பகடைக்காயாக சிலர் பயன்படுத்தியுள்ளதாகவும் இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சேலம் இளங்கோவனை காவல்துறையினர் தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டுமென அவர் கேட்டுள்ளார்.
சேலம் இளங்கோவனை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் நிழலாக வலம் வரக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கூட சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கிறார்.
இதனிடையே தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கொடநாடு கொலை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் உள்ள எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, ` கொடநாடு வழக்கை மறு விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்' என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி, கொடநாடு வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் தொடர் விசாரணையை நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் உள்ளிட்டோர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா காட்சிகள்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் பல்வேறு த்ரில்லர் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. கொடநாட்டில் பணிபுரிந்த அதில் சம்பந்தப்பட்டவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது, தற்செயலாக நடந்ததாக தெரியவில்லை. சிலரால் அரங்கேற்றப்பட்ட கொலை என்பதில் எந்த விதத்திலும் அச்சம் இல்லை. இந்த கொலையை செய்ய தூண்டியவர்கள் யார் என்பது, தற்போது காவல்துறையினர் செய்து வரும் விசாரணையில் மூலம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என நம்புகிறோம்.
முதல்வருக்கு கோரிக்கை
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சரை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்துகிறேன். கொடநாடு தேயிலை எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமும் மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான சேலம் இளங்கோவனை நோக்கியே குற்றவாளிகள் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
Recommended Video
சேலம் இளங்கோவன்
சேலம் இளங்கோவனை பகடைகாயாக பயன்படுத்தி கொடாநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியிருப்பதாக தெரிகிறது. ஆகவே சேலம் இளங்கோவன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதால், கொடாநாடு வழக்கில் தொடர்புடைய பலர் தற்கொலை செய்து கொண்டது போல, இளங்கோவனுக்கும் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. ஆகவே இளங்கோவனை காவல்துறையினர் தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.