தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை, பீதி வேண்டாம்! டெஸ்ட் கருவியும் வந்தாச்சு: விஜயபாஸ்கர்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், சென்னை கிங் இன்ட்டிடியூட் மருத்துவனையில் வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய உபகரணங்கள் இருப்பதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று மாலை அவர் கூறியதாவது: சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற விமான நிலையங்களில் 5543 பேரை இதுவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். சீனாவிலிருந்து 646 பேர் வருகை தந்தனர். இது தவிர வைரஸ் பாதித்த பிற நாடுகளையும் சேர்ந்தவர்கள் என மொத்தம் 799 நபர்கள் தமிழகம் வருகை தந்துள்ளனர்.
அவர்களை, அந்தந்த ஊர்களிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். தினசரி அவர்களின் செல்போன்களுக்கு தொடர்புகொண்டு காய்ச்சல் அறிகுறி, இருமல், தும்மல் அறிகுறி இருக்கிறதா என்பது தொடர்பாக நாங்கள் விசாரித்தபடியே இருக்கிறோம்.
இவர்கள் அனைவருமே இதுவரை நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறார்கள். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை வெற்று வருபவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இல்லை.
சென்னை கிங் இன்ஸ்டிட்யூட்டில் இப்போது கொரோனா வைரஸ் சோதனை உபகரணங்கள் வந்துள்ளன. எனவே இதுவரை புனே ஆய்வகத்தை மட்டுமே நம்பியிருந்த நிலை மாறியுள்ளது. 48 மணி நேரத்தில், கொரோனா வைரஸ் சோதனை முடிவுகள் வெளியாகும்.
மருத்துவமனைக்கு சந்தேகத்தின் பேரில் வருவோரையெல்லாம், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என நினைக்க வேண்டாம். தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கிடையாது. மக்கள் பீதியடைய வேண்டாம். ஊடகங்கள், சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை மட்டும் வெளியிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சீனாவிலிருந்து, தமிழகம் வரும் எல்லாருக்குமே வைரஸ் இருக்கு அப்படின்னும், அந்த கண்ணோட்டம் அந்த பார்வையுமே தவறு. இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.