மயிலாடுதுறையில் ஆளுநர் கார் மீது கற்கள், கருப்பு கொடி வீசப்பட்டதா? தமிழக போலீஸ் முக்கிய விளக்கம்
சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என். ரவி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தமிழ்நாடு போலீசார் விளக்கம் அளித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அவருக்குப் பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மன்னம்பந்தல் வழியாக தருமை ஆதீனத்திற்கு ஆளுநர் வருகை புரிந்தார்.
ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு.. கான்வாய் மீது வீசப்பட்ட கருப்பு கொடிகள்.. பரபரப்பு சம்பவம் -வீடியோ
போராட்டம்
தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ரதம் செல்ல இருந்தது. இதை இன்று ஆளுநர் ரவிதான் ஆதீனத்தில் துவங்கி வைத்தனர். இந்த விழாவிற்கு ஆளுநர் ரவியை அழைக்கக் கூடாது என்று திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்து போராட்டம் செய்தனர். ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் செய்தன.
போலீசார் விளக்கம்
அப்போது ஆளுநர் மன்னம்பந்தல் பகுதியைக் கடந்து செல்லும் போது போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். இதற்கிடையே ஆளுநர் வாகனம் மீது கருப்பு கொடிகள் வீசப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்தத் தகவலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கூட கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்தச் சூழலில் இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளது.
வாகனம் மீது தாக்குதல்
அதாவது ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்குக் காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனம் மீது கற்கள், கொடிகளை வீசியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள காவல் துறை, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்து இருந்ததாகவும் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றியதாகவும் கூறியுள்ளது.
எப்போது கருப்பு கொடி வீசப்பட்டது
மேலும், ஆளுநரின் வாகனம் மற்றும் உதர கான்வாய் வாகனங்கள் காலை 9.50 மணிக்கே ஏவிவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைக் கடந்துவிட்டது என்றும் ஆளுநர் ரவியின் கான்வாய் முற்றிலும் சென்ற பிறகே ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்புக்கொடிகளை வீசி எறிந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆளுநரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.