தஞ்சை பெரிய கோவிலும் ராஜ ராஜ சோழனும்..அச்சப்படும் அரசியல்வாதிகள்..மூட நம்பிக்கையை உடைத்த ஸ்டாலின்
சென்னை: தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு செல்வது என்றாலே அரசியல்வாதிகளுக்கு ஆகாத விசயம். பதவி பறிபோகும் என்ற அச்சம்தான் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பல அரசியல்வாதிகளை செல்ல விடாமல் செய்து விட்டது. அந்த மூட நம்பிக்கையை உடைக்கும் விதமாக ராஜ ராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அசராமல் கம்பீரமாக நிற்கிறது தஞ்சாவூர் பெரிய கோவில். கி.பி 1006ஆம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, இன்றைக்கும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கம்பீரமாக நிற்கிறது தஞ்சை பெருவுடையார் கோவில். உலகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தினமும் வந்த இந்த கோவிலை பார்த்து பிரமித்த வண்ணம் உள்ளனர். ஆனால் இந்திய அரசியல்வாதிகளுக்குத்தான் இந்த கோவிலுக்குள் நுழைய அச்சமாக இருக்கிறது. காரணம் கடந்த 50 ஆண்டுகாலமாக நிலவும் நம்பிக்கைதான்.
தமிழகத்திற்கும் தமிழர்களின் கட்டடக்கலைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இக்கோவிலானது தமிழக ஆட்சியாளர்களுக்கு மட்டும் என்றைக்குமே பிடித்தமான கோவிலாக இருந்ததில்லை. அதனால்தான் இக்கோவிலை முறையாக பராமரிக்காமல் பாராமுகமாகவே இருந்தனர். கடந்த 1997ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, யாகசாலை பூஜையின்போது பந்தலில் பற்றிய தீ கோயில் முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 48 பேர் உயிரிழந்ததும், பலரும் படுகாயம் அடைந்தனர். இதன்பின்னர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த யாரும் ஆர்வம் காட்டவில்லை.
தீய சக்தி கருணாநிதி என சொன்னால் ஓபிஎஸ்சுக்கு பதவி தர ரெடி.. ஆர்.பி.உதயகுமார் போட்ட
தஞ்சை பெரிய கோவில்
யுனெஸ்கோவால், உலக பாரம்பரிய சின்னம் என, அறிவிக்கப்பட்டு, உலக அளவில், பிரசித்த பெற்றது, தஞ்சை பெரிய கோவில். பிரம்மாண்டமான இந்த கோவிலுக்குள் கேரளந்தான் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில் வழியாக, மூலவர் பெருவுடையாருக்கு எதிரே உள்ள படி வழியாக வந்து தரிசிப்பவர், பிரபலமானவராக இருந்தால், அவர் பதவி அல்லது உயிர் பறிபோகும் என்பது சென்டிமென்ட். இங்கு வந்து சென்ற பின், அவர்கள் உயரிய பொறுப்பை, ருசித்ததில்லை. இப்படியொரு சென்டிமென்ட் காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த பட்டியலில், முன்னாள் ஜனாதிபதிகள் ஜெயில்சிங், எஸ்.டி.சர்மா, முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், கருணாநிதி என, பலரும் அடங்குவர்.
சோதனை மேல் சோதனை
கடந்த 1976ம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலில் ராஜ ராஜ சோழன் சிலை வைக்க வேண்டும் என்று மத்திய அரசுடன் மோதினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. சிலையை உள்ளே வைக்க மத்திய அரசு அனுமதி மறுத்தது. நினைவுச் சின்னமாக தொல்பொருள் இலாகாவால் பாதுகாக்கப்படும் கோயில் அது. புதிய சிலை ஒன்று வைப்பதற்கு அதற்கான சட்டத்தில் வழி இல்லை" என்று காரணம் கூறியது.
கருணாநிதி
அதே நேரத்தில் கோயிலுக்குள் உள்ள வராஹி அம்மனுக்கு புது மண்டபம் எழுப்பி, முதலில் அதற்குக் குடமுழுக்குச் செய்ய நினைத்திருந்தார்கள். புதிதாக ராஜ ராஜன் சிலை கோயில் உள்ளே வைக்கக் கூடாது என்றால் வராஹி அம்மனுக்கு மட்டும் புதிதாக மண்டபம் கட்டலாமா? சட்டம் அதற்கு மட்டும் இடம் தருகிறதா?" என்று கருணாநிதி தரப்பிலிருந்து இதைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பப் பட்டது. இதனால் வராஹி அம்மனின் புதிய மண்டபத்தை இடிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது.
திமுக ஆட்சி டிஸ்மிஸ்
இந்தப் பிரச்சினை கிளம்பிய சிறிது காலத்திற்குள் கருணாநிதி அரசு பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. கடைசியில் அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வராஹி அம்மனின் புதிய மண்டபம் இடித்து முடிக்கப்பட்ட அன்றுதான் அதாவது 1976 ஜனவரி 31ம் தேதிதான் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது என்கின்றனர் வரலாறு அறிந்தவர்கள். எமர்ஜென்ஸியை அடுத்து வந்த தேர்தலில் வராஹி அம்மன் மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட பிரதமர் இந்திராவும் தோற்றுப் போய், அவரது ஆட்சியும் போனது.
எம்ஜிஆர் - இந்திரா காந்தி
பெரிய கோயில் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தலைவர்களும் இப்படி பாதிக்கப்பட்டது முதல் நிகழ்ச்சி என்கிறார்கள் ஊர் மக்கள். ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு வைபவத்திற்கு வரும்போதுதான் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கோயிலேயே சற்று மயக்கம் அடைந்தார். அதன் பிறகு சில நாட்களில் முதல்வரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போதைய இந்திரா காந்தியின் எதிர்பார்க்காத சோக மரணமும் நிகழ்ந்தது.
அரசியல் தலைவர்கள் அச்சம்
கோவிலுக்குள் போனால் ஒன்று பதவி பறிபோகும் இல்லாவிட்டால் உயிர் போகும் என்ற அச்சத்தையும் மோசமான சென்டிமென்ட்டையும் உடைக்கிறேன் என, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பெரிய கோவிலின், 1,000வது ஆண்டு விழா கொண்டாடினார், அப்போதைய முதல்வர் கருணாநிதி. அந்த விழாவில், ஆ.ராசா, கனிமொழி, கோ.சி.மணி, பழனிமாணிக்கம் உட்பட தி.மு.க.,வின் பலரும் கலந்து கொண்டனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் அத்தனைபேரின் பதவியும் பறிபோனது. கனிமொழியும் ஆ. ராசாவும் திகார் சிறை வரை சென்று வந்தனர்.
தஞ்சை பெரிய கோவில் 1000
தஞ்சை பெரிய கோவிலின், 1,000வது ஆண்டு விழா கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. பெரிய கோவிலின் பிரதான வழியில் வராமல், ராஜராஜசோழன் சிலை வழியாக, சிவகங்கை பூங்கா வழியாக கோவிலுக்குள் நுழைந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியை பார்வையிட்டார். விழாவில் பேசிய கருணாநிதி, ராஜராஜ சோழன் நல்லவராகவும், வல்லவராகவும் இருந்தது. அப்போது இருந்த தேர்தல் முறை, மக்களாட்சி முறை ஆகியவற்றை திறம்பட நடத்தி மக்களுக்கு எல்லாம் பயனுள்ள மன்னனாக வாழ்ந்து வந்தான் ராஜராஜன் எனும் மும்முடிச் சோழன். அவன் செல்லாத பகுதிகள் இல்லை. வெல்லாத மன்னர்கள் இல்லை. அவரைக் கண்டு அஞ்சாத மன்னர்கள் இல்லை. ஆனால், அவர் அமைதியின் உருவமாக, ஆற்றலின் வடிவமாக, ஆன்மீகவாதியாக, எல்லோருக்கும் நல்லவனாக, அரசியல்வாதியாக, எல்லோரையும் சமமாக கருதுபவனாக ராஜராஜன் விளங்கினான். அவரது மகன் ராஜேந்திரன் 1012-ல் பட்டம் சூட்டினான். தந்தையும், மகனுமாக சிறப்பாக ஆட்சி செய்தது வரலாற்று சிறப்பு மிக்கது. தந்தைக்கு துணையாக நின்று வெற்றிகளை குவித்தான். அந்த ராஜேந்திரனையும், அவரது தந்தை ராஜராஜ சோழனையும் பெற்ற இந்த தஞ்சை தரணியில் அவர்களுக்கு விழா எடுப்பது நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளும் விழா ஆகும் என்று கூறினார் கருணாநிதி.
செயல்பட்ட சென்டிமெண்ட்
சென்டிமென்ட்டை உடைப்பதாக விழா நடத்தியவர்களுக்கு, அடுத்த சில மாதங்களிலேயே பெரியகோவில் சென்டிமென்ட் வேலை செய்ய ஆரம்பித்தது. அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில், திமுக படுதோல்வி அடைந்தது. அதன்பின்னர் திமுக ஆட்சிக்கட்டிலில் அமரமுடியவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 100 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டத்தை நடத்தியது அதிமுக அரசு. அதை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு கொண்டாடினர். இதனையடுத்து அதிமுகவிற்கு அடுத்தடுத்து சோதனைகள் ஆரம்பமாகி விட்டது. சட்டசபை தேர்தலில் படு தோல்வி அடைந்தது. கட்சியே இப்போது பிளவு பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும், தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றாலே பாதிப்பை ஏற்படும் என்று அரசியல் தலைவர்கள் நம்பிக்கைகொண்டிருக்கின்றனர். அந்த மூட நம்பிக்கையை உடைக்கும் வகையில் ராஜராஜ சோழன் மணிமண்டபத்தை பொலிவூட்ட உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு தஞ்சை பெரிய கோவிலை பார்வையிட வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் ராஜ ராஜ சோழன் பற்றியும் தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றியும் உள்ள மூட நம்பிக்கைகளை உடைக்கும் விதமாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.