"ஸ்டாலின் போனதும் உள்ளே வந்த கார்".. அடுத்தடுத்த ரெய்டு.. குறி வைக்கப்படுகிறதா திமுக? பின்னணி என்ன?
சென்னை: திமுக எம்எல்ஏ எ.வ வேலு வீட்டில் செய்யப்பட்ட வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து தற்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டிலும் ஐடி ரெய்டு நடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களின் வீடு திடீரென தேர்தல் நேரத்தில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
சபரீசனுக்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று இரவுதான் ஸ்டாலின் கொளத்தூரில் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் ரெய்டு நடக்கிறது.
ஸ்டாலின்
அதிலும் தேர்தலுக்கு வெறும் 3 நாட்களுக்கு முன் இந்த சோதனை நடக்கிறது. கடந்த வாரம்தான் திமுக எம்.எல்.ஏ., எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்யப்பட்டது. சென்னை, திருவண்ணாமலை உட்பட 18 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்யப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த போதுதான் இந்த ரெய்டு நடந்தது.
ரெய்டு
ஸ்டாலின் எ.வ.வேலுவின் கல்லூரியில்தான் தங்கி இருந்தார். அங்குதான் இந்த ரெய்டு நடந்தது. ஸ்டாலின் அங்கிருந்து சென்ற சில நிமிடங்களில் உள்ளே வருமான வரித்துறை கார் வந்து சோதனை செய்தது. அப்போதே ஸ்டாலினை குறி வைத்து சோதனை நடந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது நேரடியாக ஸ்டாலினின் மகள் வீட்டிலேயே சோதனை நடக்கிறது.
சோதனை
திமுகவை குறி வைத்து இப்படி சோதனை நடப்பதாக தலைவர்கள் பலர் குற்றஞ்சாட்டி உள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெல்ல போகிறது. இதனால் திமுகவை அச்சுறுத்தும் வகையில் இப்படி ரெய்டுகளை ஏவி விடுகிறது. தோல்விக்கு பயந்து பாஜக ரெய்டு அஸ்திரத்தை ஏவி உள்ளது என்று திமுகவினர் பலர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஆனால்
ஆனால் திமுக தலைவர்கள் மட்டும் இப்படி குறி வைக்கப்படவில்லை. பலரின் வீடுகளில் இப்படி சோதனை நடந்துள்ளது என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் பட்டியலை அடுக்குகிறது. முதலில் மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரன் வீட்டில் வருமானவரித்துறை கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை நடத்தியது. இதுதான் முதல் சோதனை.
ரெய்டு எப்படி
அதன்பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரின் உதவியாளர் வீட்டில் சோதனை நடந்தது. அங்கு மட்டும் அதிகாரிகள் 13 மணி நேரம் சோதனை செய்தனர். அதேபோல் அதிமுக எம்எல்ஏ ஆர். சந்திரசேகரிடம் ஜேசிபி ஓட்டுநராக பணியாற்றியவரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. இப்படி தொடர் சோதனையில் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னணி
எனவே சோதனை நடப்பது இயல்புதான் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. தேர்தல் நேரத்தில் சோதனைகளை நடத்துவோம். எந்த கட்சியையும் குறி வைத்து நடத்தவில்லை. எங்களுக்கு வரும் தகவலை வைத்தே சோதனை நடத்துகிறோம் என்று வருமானவரித்துறை தரப்பு கூறியுள்ளது.