ஓபிஎஸ் போஸ்டர் கிழிப்பு.. உச்சத்தை எட்டும் ஒற்றைத் தலைமை விவகாரம்.. ஆத்திரத்தில் ஆதரவாளர்கள்..!
சென்னை: அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது அதிமுகவில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த ஒற்றைத் தலைமை விவகாரம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை முற்றிலும் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் முயற்சித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

தனித்தனியே ஆலோசனை
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இபிஎஸ் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல் சென்னையில் ஒபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் சந்திக்க வந்தனர்.

இருவருக்கும் ஆதரவாக போஸ்டர்
இதனிடையே இபிஎஸ் பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களால் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது. மறுபக்கம் தேனி, ராமநாதபுரம் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனால் இரு தரப்பு ஆதரவாளர்களும் இருவரின் வீடுகளுக்கு முன் குவிந்தனர்.

போஸ்டர் கிழப்பு
இந்தநிலையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஓட்டப்பட்ட போஸ்டரில் ஓபிஎஸ் முகம் கிழிக்கப்பட்டது. இதற்கு இபிஎஸ் ஆதரவாளர்கள் தான் காரணம் என்று கூறி, ஒபிஎஸ் ஆதவரவாளர்கள் ஏராளமானோர், திடீரென பசுமை வெளிச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இபிஎஸ்-க்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.

ஆதரவாளர்களிடையே உரசல்
இதனால் இபிஎஸ் - ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் சிறு சிறு உரசல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போக்குவர்த்து பாதிக்கப்படுவதாக கூறியதையடுத்து, ஒபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications