ஒருமைப்பாட்டை முன்னிறுத்துவோம்! இந்து சமுதாய உறவுகளுக்கு தீபாவளி நல் வாழ்த்துகள்! -தமிமுன் அன்சாரி!
சென்னை: வெறுப்பு அரசியலை புறக்கணித்து, ஒருமைப்பாட்டை முன்னிறுத்துவோம் எனக் கூறி தீபாவளி வாழ்த்துக் கூறியுள்ளார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி. அவர் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தி வருமாறு;
''இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி திகழ்கிறது. இந்து சமுதாயப் பெருமக்கள் கொண்டாடி மகிழும் இத்திருநாள், அவர்களின் மகிழ்ச்சிக்குரிய அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. பெரும்பான்மையினராக வாழும் போதும், சிறுபான்மையினரின் மீது அன்பு பகிர்ந்து வாழும் அவர்களின் உயரிய பண்பாட்டை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.''

''அன்பு, ஒற்றுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை மதித்திடும் இந்து சமுதாய உறவுகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். வெறுப்பு அரசியலை புறக்கணித்து, ஒருமைப்பாட்டை முன்னிறுத்தும் மகத்தான பணிகளை எல்லோரும் இணைந்து முன்னெடுக்க இந்நாளில் உறுதியேற்போம்.''
இதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள வாழ்த்து வருமாறு; ''தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ராவணனை வென்று 14 வருட வனவாசத்திற்குப் பிறகு ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பினார். அயோத்தியின் குடிமக்கள் தங்கள் வீடுகளையும் முழு நகரத்தையும் விளக்குகளால் அலங்கரித்தனர். இது தான் தீபாவளி என்ற கதை வட இந்தியாவில் உள்ளது.''
''அதேபோல், மோடி ஆட்சியில் 10 ஆண்டு காலம் மக்கள் பட்ட இன்னல்கள் முடிவுக்கு வர இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நாடே இருக்கும் நிலையில், இந்த தீபாவளி சிறப்பு வாய்ந்ததாகும். நாடு முழுவதும் இந்த நம்பிக்கை பரவிக்கிடப்பது மக்களின் எழுச்சியைப் பார்க்கும் போது தெரிகிறது. அடுத்த ஆண்டு மலரப்போகும் நல்லாட்சிக்கான கொண்டாட்டமாக இந்த தீபாவளி அமையட்டும்.''
''பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம்போல் மற்ற மதத்தவரோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம்.''
இவ்வாறு தமிமுன் அன்சாரியும், கே.எஸ்.அழகிரியும் வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications