முகச்சிதைவு நோயால் பாதித்த ஆவடி சிறுமி.. உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு.. 4 நாட்களில் அறுவை சிகிச்சை
சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமி டானியாவுக்கு தண்டலதத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரும் திங்கள்கிழமை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களின் மூத்த மகள் டானியா. ஒன்பது வயதாகிறது . இவர் டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். எல்லா குழந்தைகளும் போல டானியாவும் மூன்று வயது வரை இயல்பாக வளர்ந்துள்ளார். மூன்றரை வயதிற்கு பின்னர் குழந்தை டேனியாவின் முகத்தில் தோன்றிய கரும்புள்ளியால் வாழ்க்கை முழுவதுமாக தலைகீழாக மாறி உள்ளது.

சாதாரண ரத்த கட்டு
அது சாதாரண ரத்தக்கட்டு என பெற்றோர் நினைத்த நிலையில் ஆங்காங்கே சிகிச்சை பெற்றும் அந்த கரும்புள்ளி போகவில்லை. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கரூரில் உள்ள தோல் மருத்துவரிடம் சிகிச்சை பெறப்பட்டது. அவர் கொடுத்த மருந்தை தடவிய நிலையில் முகத்தின் ஒரு பக்கம் சிதைய தொடங்கியது. இதனால் அந்த மருந்தை தடவுவதை பெற்றோர் நிறுத்திவிட்டனர்.

முகத்தை சீரமைக்க
சிறுமியின் முகத்தை சீரமைக்க பல்வேறு மருத்துவமனைகளில் ரூ 40 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். இந்த நிலையில் பள்ளியில் அந்த சிறுமி ஆசிரியர்கள், மற்றும் சக மாணவர்களால் புறக்கணிக்கப்படுவதாகவும் வகுப்புகளில் தனிமைப்படுத்தப்படுவதாகவும் தனது முகத்தை சீரமைத்தால் மட்டுமே தன்னால் பள்ளிக்கு செல்ல முடியும் என்றும் அதற்கு முதல்வர் உதவுமாறும் கண்ணீர் மல்கி டானியா கோரிக்கை விடுத்தார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த கோரிக்கை முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றது. அவர் உடனடியாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான், மருத்துவர்களுடன் சென்று சிறுமியை நேரடியாக சந்தித்து அவரது மருத்துவ அறிக்கைகளை பார்த்தார்.

திங்கள்கிழமை அறுவை சிகிச்சை
இதனிடையே சிறுமிக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை தாமாக முன் வந்தது. இதையடுத்து நேற்று மாலை சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. இன்றைய தினம் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள், ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதையடுத்து அவருக்கு திங்கள்கிழமை அறுவை சிகிச்சை செய்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications