தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்கள்.. களப்பணியாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் மா.சு
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை 3-வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன.
தடுப்பூசி மீதான பயம் காரணமாக முதலில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிக ஆர்வமாக போட்டு வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு விரைவுபடுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் அடிக்கடி பேசி கூடுதல் தடுப்பூசிகள் பெற்றுக் கொடுத்தார்.
தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அலுவலர்கள்.. தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க பரபரப்பு புகார்!
சிறப்பு முகாம்கள்
மேலும் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக தமிழ்நாட்டில் கடந்த 12-ம் தேதி கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதற்காக மொத்தம் 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் மட்டும் 1,600-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த சிறப்பு முகாம்களில் காலை 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
28.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி
இந்த முகாமில் 28.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. இந்த மெகா முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இலக்கை விட கூடுதலாக 8 லட்சம் தடுப்பூசிகள் அதிகம் செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. இந்த நிலையில் இதேபோல் செப்டம்பர் 19-ம் தேதி இரண்டாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
3-வது மெகா தடுப்பூசி முகாம்கள்
இதற்காக 20 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதன் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இலக்கைவிடக் கூடுதலாக 16 லட்சத்து 41 ஆயிரம் பேருக்குக் கூடுதலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை 3-வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 20 ஆயிரம் முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. இதன் மூலம் 15 லட்சம் பேருக்குச் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதிலும் இலக்கை விட கூடுதலாக தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கள்கிழமை விடுப்பு
இந்த தடுப்பூசி முகாம்களில் மருத்துவ களப்பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து வருவதால் அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ' மருத்துவத் துறையைச் சேர்ந்த களப்பணியாளர்கள் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதற்கு முன்பும், தடுப்பூசி செலுத்திய பிறகும் 15 மணி நேரம் கடும் உழைப்பைக் கொடுக்கின்றனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த முகாம்களில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்கள் அடுத்தநாள் திங்கள்கிழமை விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் பொதுமக்களும் திங்கள் கிழமை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்குத் தடுப்பூசி முகாம்களுக்குச் செல்ல வேண்டாம்' என்று கூறியுள்ளார்.