காரணமே இதுதான்.. சென்னையை உலுக்கும் 2 வைரஸ்கள்.. இதெல்லாம் அறிகுறிகள்.. சுகாதாரத்துறை தந்த வார்னிங்
சென்னையில் பரவி வரும் காய்ச்சலுக்கான காரணத்தை சுகாதாரத்துறை கண்டுபிடித்துள்ளது
சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு முடிந்த பின்னரும் சென்னையில் பெரும்பாலானோருக்கு கடுமையான காய்ச்சல், உடல் வலி, இருமல் பாதிப்புகள் இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் இதற்கான காரணம் 2 வைரஸ்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் மக்களை ஒரு உலுக்கு உலுக்கி எடுத்து விட்டது. தற்போது இந்த தொற்று பாதிப்பானது முடிவுக்கு வந்திருந்தாலும், மக்கள் இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து முழுமையாக வெளிவரவில்லை. இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக திடீரென காய்ச்சல், இருமல் பாதிப்புகள் ஏற்பட்டன.
மருத்துவமனைகளில் இது தொடர்பாக பலர் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறதா? என்று கேள்வி எழுந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிடையாது என்றும், இது சாதாரண காய்ச்சல்தான் எனவும் அரசு மருத்துவர்கள் விளக்கமளித்து வந்தனர். இந்நிலையில், இந்த காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு எது காரணம் என்பதை கண்டுபிடிக்க பொது சுகாதாரத் துறையினர் ஆய்வில் இறங்கினர்.

ஆய்வு
இந்த பாதிப்புகள் உள்ளவர்களிடம் சளி ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த சளியை கொண்டு 21 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் தற்போது ஏற்பட்டுள்ள காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு இரண்டு வைரஸ்கள்தான் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்று 'இன்புளூயன்சா-ஏ' வகை வைரஸ். இந்த வைரஸ்கள் உடலுக்குள் புகுந்து இரண்டு நாட்கள் கழித்துதான் அதன் வேலையை வெளியே காட்ட தொடங்கும். இந்த வைரஸ் கடுமையான காய்ச்சல், உடல் வலி, சோர்வு, இருமல், சளி, தலைவலி என ஆளையே ஒரு வழி ஆக்கிவிடும்.

ஆட்டம் காட்டும் வைரஸ்
இதன் பாதிப்பு ஒரு வாரம் வரை உடலில் இருக்கும். இந்த பாதிப்பு உடையவர்கள் பயன்படுத்திய பொருட்களை நாம் தொடுவதன் மூலம் இது நமக்கு பரவுகிறது. மட்டுமல்லாது இருமல் தும்மல் போன்வற்றின் மூலமும் இது பரவுகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கண்டறிய மருத்துவ சோதனைகள் இருக்கிறது. இருப்பினும் டெஸ்டில் நெகட்டிவ் என நமக்கு தெரிய வரும். ஆனாலும் இந்த வைரஸ் உடலுக்குள் இருந்து மெல்ல ஆட்டம் காட்ட தொடங்கும். இது பருவ காலங்களில் பரவும் சாதாரண வைரஸ்தான். இதனால் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இரண்டாவது வைரஸ்
அடுத்த வைரஸ் ஆர்.எஸ்.வி. இது சுவாச ஒத்திசை வைரஸ் என்றும் அழைக்கப்படுகிறது. முந்தையதை விட இது கொஞ்சம் ஆபத்தான வைரஸ் என்றே சொல்லலாம். பொதுவாக இரண்டு வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளிடம் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொடக்கத்தில் சாதாரண இருமல், சளியாக தெரிந்தாலும் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் நாளடைவில் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். இது குழந்தைகளின் நுரையீரலை நேரடியாக தாக்குவதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தில் சளி வெளியேறும்.

குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
சுவாசிப்பதில் சிரமம் இருக்கும் அதேபோல மந்தமான நிலை இருக்கும். இரத்தப் பரிசோதனை அல்லது மார்பக எக்ஸ்-ரே பரிசோதனை மூலம் இந்த தொற்று பாதிப்பு இருப்பதை கண்டுபிடிக்கலாம். இந்த இரண்டு வைரஸ்கள்தான் தற்போது சென்னையில் குழந்தைகளையும், வயதானவர்களையும் அதிக அளவில் பாதிக்கிறது. இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் கூறுகையில், "இந்த வைரஸ்கள் புதியது கிடையாது. ஏற்கெனவே புழக்கத்தில் இருப்பவைதான். இருப்பினும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் ஆகியோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

முககவசம்
இவர்களுக்கு அவசியமெனில் ஓசல்டா மிவிர் எனும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளிலும் இந்த மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் இருக்கின்றன. முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். அதேபோல அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications