வெளியில் போகும்போது குடை எடுத்துட்டு போங்க... அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்த போகுது
சென்னை: அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. அனல் காற்று காரணமாக மக்கள் பல இடங்களில் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
குறிப்பாக, வட மாவட்டங்களில் வெப்பநிலை மிக அதிகமாக காணப்படுகிறது. நேற்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் இருந்தது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தின் உள் பகுதியில் கிழக்கு திசை காற்று வலுவாக வீசாததால், அங்கு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாகி வருகிறது.
அதன் விளைவாக, அடுத்து வரும் சில தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப நிலை வழக்கத்தை விட சுமார் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரும்.
குறிப்பாக, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றனர்.