கால் வலிக்குதுனு சொன்னா.. ஆனா இப்போ! துள்ளி விளையாடிய மகளை இப்படி பண்ணிட்டாங்களே.. கலங்கும் அப்பா!
சென்னை: சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்கை காரணமாக கால்பந்து விளையாட்டு வீராங்கனையின் கால் அகற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதனையடுத்து பெரியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் துறைரீதியான விசாரணையும் நடத்தப்பட்டது. இருப்பினும் தனது மகளின் கால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியாததை நினைத்து பெற்றோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
பாகிஸ்தானுடன் பைனல்.. நாங்க இருக்கோம்..அடிச்சி ஆடுங்க.. இங்கிலாந்துக்கு ‛‛மெசெஜ்’’ கூறிய ரிஷி சுனக்
மூட்டு வலி
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பிரியா(17). இவர் ராணி மேரி கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் படித்து வருகிறார். கால்பந்து விளையாட்டு வீராங்கனையான இவர் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில், இவருக்கு கால் மூட்டில் வலி ஏற்படவே கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் மாணவியின் வலது கால் மூட்டு பகுதியில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை
இதனையடுத்து மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. பின்னர் ஒரு சில நாட்களில் காலில் வீக்கம் ஏற்பட்டு கால் உணர்வை இழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் அவரை ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்த காலில் ரத்த தொற்று ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். மேலும், இது உடல் முழுக்க பரவாமல் இருக்க உடனடியாக மாணவியின் தொடை வரை கால் அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கால் வெட்டி எடுப்பு
இதை எதிர்பார்க்காத பெற்றோர் கதறி அழுதுள்ளனர். சிகிச்சைக்காக வந்த பெண்ணின் காலை வெட்டி எடுக்கிறீர்களே என்றும் கேள்வியெழுப்பினர். இருப்பினும் தனது மகளின் உயிர் முக்கியம் என்பதால் காலை வெட்டி எடுக்க அவர்கள் சம்மதித்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பெரியார் நகர் மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் கால் வெட்டியெடுக்கப்பட்டதாக மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டினர். எனவே சமபந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
விசாரணை
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மாணவிக்கு வழங்கப்பட்ட சிகிச்சை, மருந்துகள், பாதிப்புக்கான காரணம் உள்ளிட்டவை குறித்து தகவல்கள் பெறப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கை மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சாந்தி மலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு வேலை
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார். சாதாரண சிகிச்சைக்காக வந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்து பின்னர் கால் அகற்றப்பட்டது பெரும் வேதனையளிப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். அதேபோல மாணவிக்கு அரசு வேலை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.