சுங்க கட்டணத்தை ஜெயலலிதா குறைத்தாரே.. இப்போ ஏன் அரசால் முடியாது.. சசிகலா சரமாரி கேள்வி
சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தியுள்ள சுங்கக் கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என வி.கே. சசசிகலா வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசும் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வி.கே. சசசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அமல்படுத்தியுள்ள சுங்கக்கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழக அரசும் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுமார் 50 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்ற நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளிலும், தற்போது மேலும் 28 சுங்கச்சாவடிகளிலும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கக்கட்டணத்தை உயர்த்தியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

அனைத்து தரப்பும் பாதிப்பு
அதிலும் முன்பு இருந்ததைவிட 15 சதவீதம் அதிகமாக சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதன் காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடிய சூழ்நிலை இருப்பதால், ஏழை எளிய சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், வணிகர்கள், வாகன உரிமையாளர்கள் போன்ற அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வரி ஏற்றம்
தமிழகத்தில் ஏற்கனவே சொத்துவரி உயர்வு, ஆவின் பொருட்களின் விலையேற்றம், கட்டுமான பொருட்கள், விவசாயம் சார்ந்த பொருட்களின் விலை உயர்வுகளால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்து தவிக்கும் நிலையில், இந்த சுங்கக்கட்டண உயர்வு அனைவருக்கும் கூடுதல் சுமையளிப்பதாக அமைந்துவிடும்.

ஆம்னி பஸ் வசூல்
அதேபோன்று, தமிழகத்தில் தனியார் பேருந்துகள் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தனது இஷ்டத்திற்கு பேருந்து கட்டணத்தை மக்களிடம் வசூல் செய்து வரும் நிலையில் தற்பொழுது அது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் பொதுமக்களின் நலனைக்கருத்தில் கொண்டு சுங்கக்கட்டண உயர்வை கைவிட வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள சாலைகள் பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், விதிகளுக்கு ஏற்ப சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைளை எடுத்திட வேண்டும்.

ஜெயலலிதா செய்தார்
புரட்சித்தலைவி அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சி காலத்தில் இதேபோன்று சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டபோது, ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகத்தினரை அழைத்து பேசி கட்டண உயர்வை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சுங்கக்கட்டணம் குறைக்கப்பட்டது. அதேபோன்று, தமிழக ஆட்சியாளர்களும் முயற்சி மேற்கொண்டு சுங்கக்கட்டண உயர்வை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வி.கே. சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications