எஸ்.பி வேலுமணியிடம் விசாரணை நிறைவு.. லாக்கர் சாவிகள், ஆவணங்கள், ரூ.13 லட்சம் பறிமுதல்.. பரபர தகவல்!
சென்னை:கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
எஸ்.பி வேலுமணி வீடு, சகோதரர் அன்பரசன் வீடு, அதிமுக பிரமுகர் சந்திரசேகரன் வீடு என்பவை உள்பட எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான சுமார் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
எஸ்.பி வேலுமணி தனது பதவி காலத்தில் அரசு ஒப்பந்தங்களை தனக்கு தெரிந்தவர்களிடம் வழங்கி முறைகேடு செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகவும் தெரியவந்ததால் இந்த சோதனை நடைபெறுகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

எஸ்.பி வேலுமணியிடம் விசாரணை
இது தவிர எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் வைத்து எஸ்.பி வேலுமணியிடம் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் எஸ்.பி வேலுமணிக்கு நெருங்கிய அரசு அதிகாரிகள், கோவையில் மட்டும் 5 பண்ணை வீடுகள் உட்பட கோவையில் மட்டும் 35 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.இந்த சோதனைக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுக கண்டனம்
எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை நடைபெறும்போது அங்கு கூடிய அவரது ஆதரவாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதேபோல் எம்.எல்.ஏ.க்கள் விடுதி முன்பும் ஏராளாமான அதிமுகவினர் திரண்டனர். ''இது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ஆதாரம் இல்லாமல் இப்படி சோதனை நடத்துவது தவறு. திமுக அரசு முன்னாள் அமைச்சர்களை குறிவைக்கிறது'' என்று அதிமுகவின் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

12 மணி நேர சோதனை
பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் டெண்டர் ஒதுக்குவதில் ஏராளமான முறைகேடு நடந்ததற்கான ஏராளமான ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் கம்ப்யூட்டர்கள் ஆகியவை சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கோவை குனியமுத்தூரில் எஸ்.பி வேலுமணி வீட்டில் சுமார் 12 மணி நேரம் நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.

லாக்கர் சாவி பறிமுதல்
எஸ்.பி.வேலுமணி வீட்டில் இருந்து முக்கியமான லாக்கர் சாவி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேறு சில ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது. மொத்தம் 60 இடங்களில் நடந்த சோதனையில் பெரும்பாலான இடங்களில் சோதனை முடிந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எஸ்.பி.வேலுமணிக்கு நெருங்கிய அதிமுக பிரமுகர் சந்திர சேகர்
அலுவலகத்தில் இருந்து கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்ட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் நநதகுமார் அலுவலகத்தில் இருந்தும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

10 மணி நேர சோதனை நிறைவு
இதேபோல் எஸ்.பி.வேலுமணியிடம் சென்னை எம்.எல்.ஏ.க்களிடம் விடுதியில் வைத்து சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நெருக்கமானவர்கள், ஆதரவாளர்களுக்கு டெண்டர் ஒதுக்கியது தொடர்பாக அதிகாரிகள் வேலுமணியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் 9 நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.13.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.
Recommended Video

ரூ.2 கோடி வைப்புத்தொகை ஆவணங்கள்
நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள், பண பரிவர்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. ரூ.2 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்ட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications