வடகிழக்குப் பருவமழை ஜோராக தொடங்கியது - 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம், கேரளா, புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவே இருக்கும் என்று கூறியுள்ளார் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையின்போதே, அதிக மழையைப் பெறுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையால் மட்டுமே பரவலாக பயன் கிடைக்கிறது.

ஜூன் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டமே தென்மேற்கு பருவமழை காலமாகும். நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் விடை பெற்றுள்ளது. தென்மேற்குப் பருவமழை இயல்பை விட 23 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமைழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில் தமிழகம் 60% மழையை பெறும். மேலும் வடகிழக்குப் பருவமழையின் போது தமிழகத்தின் சராசரி மழை அளவு இயல்பாக பதிவாகும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கியுள்ளது. வரும் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications