கொரோனாவால் இறந்தவரின் உடலை 2 மாதங்கள் கழித்து கொடுத்த விவகாரம்.. மனிதஉரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
சென்னை: கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவரின் உடலை 2 மாதங்கள் கழித்து கொடுத்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தின் டிஜிபி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அலமேலு என்பவர் கொரோனா தொற்று பாதித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த மே 19ம் தேதி அனுமதிக்கபட்டார். சிகிச்சை பலனின்றி மே 22ம் தேதி உயிரிழந்த அவரது உடலை எரித்துவிட்டதாக அவரது உறவினர்களிடம் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்தநிலையில், ஆகஸ்ட் 9ம் தேதி அலமேலுவின் உறவினர்களை தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகம் உடலை பெற்றுகொள்ளுமாறு தெரிவித்துள்ளது. இதனால் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்ததையடுத்து, உறவினர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர். உடலை எரிக்க 3ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் புகார் அளித்தனர்.
இது சம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட மாநில மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையத்தின் டிஜிபிக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications