அதல பாதாளத்திற்கு போன ஜிடிபி... அப்போ ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சி அரோகராவா?
2020-2021ன் முதல் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி - 23.9% சரிந்துள்ளது. இதே நிலை நீடித்தால் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: 2024-25 ஆம் ஆண்டுக்குள் நமது பொருளாதாரம் ஐந்து டிரில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட பொருளாதாரமாக உயர வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்திருந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அந்த இலக்கில் இப்போது பெரிய பாறாங்கல்லே விழுந்திருக்கிறது. 2020-2021ன் முதல் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 23.9% சரிந்துள்ளது. இது கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான சரிவு என்பது அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய உண்மை.
ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கினை நிர்ணயித்துத் தந்தவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். பிரதமர் நரேந்திர மோடியும் தனது அடுத்த லட்சியம் இதுதான் என்றார்.
கடந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 2.61 டிரில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட பொருளாதாரமாக உயர்ந்ததன் மூலம் பிரான்ஸ் நாட்டினைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்தது இந்தியா.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதனை ஐந்து டிரில்லியன் டாலர் மதிப்புக்கொண்ட பொருளாதாரமாக அதாவது நம் நாட்டின் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.350 லட்சம் கோடி உயர்த்தவேண்டும் என்பது மத்திய அரசின் இலக்கு.
GDP 2020: சீனா மட்டுமே வளர்ச்சி... அனைத்து உலக நாடுகளிலும் சரிவு!!
அமெரிக்கா 1988ஆம் ஆண்டிலேயே ஐந்து டிரில்லியன் டாலர் என்கிற நிலையை அடைந்துவிட்டது. ஜப்பானைப் பொறுத்தவரை 1994ஆம் ஆண்டிலேயே அந்த நிலையை அடைந்துவிட்டது சீனாவோ 2008ஆம் ஆண்டிலேயே 5.11 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டியது. இந்தியாவின் இலக்கு 2024-25ஆம் ஆண்டில்தான் ஐந்து டிரில்லியன் டாலர் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட காலத்தில் இருந்த நிலைமை வேறு. இப்போதைய நிலைமை வேறு. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரத்தையே அடி மட்டத்திற்கு கொண்டு போய்விட்டது.
ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற நிலையினை அடைய ஆண்டுதோறும் சராசரியாக 12% ஜிடிபி வளர்ச்சியடைந்தால் மட்டுமே ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற கனவு நனவாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்த நிலையில் தற்போது ஜிடிபி எதிர்மறையான வளர்ச்சியை கண்டுள்ளது. அதாவது
இந்தியாவின் ஜிடிபியானது கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே இரட்டை இலக்கத்தில் அதாவது, கடந்த 2010ஆம் ஆண்டில் 11 சதவிகிதத்துக்கு சற்று அதிகமாக வளர்ச்சி கண்டிருக்கிறது. அதன்பிறகு 2011ஆம் ஆண்டில் 10 சதவிகிதம் என்கிற இலக்கினைத் தொட்டது. அதன்பிறகு இரட்டை இலக்கத்தைத் தொடவே இல்லை
கடந்த 2016-17ஆம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 8.2 சதவிகிதமாக இருந்தது. பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியது. 2017-18 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருந்தது. 2018-19 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6 புள்ளி 8 சதவிகிதமாக சரிந்தது.
2019-20ஆம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகிதமாக குறைந்தது. இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும். ஜிடிபி வளர்ச்சியை அடைந்து விடலாம் பொருளாதார வளர்ச்சியில் மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையோது பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். அந்த நம்பிக்கையில் இடியை இறக்கும் விதமாக மார்ச் மாதத்தில் கொரோனா வந்து எல்லோரையும் கொத்திப்போட்டு விட்டது.
இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 2019-20 ஆம் ஆண்டில் 7.5 சதவிதமாக வளர்ச்சி அடையும் எனவும் 2020-21 , 2021 -22 என அடுத்தடுத்த நிதியாண்டுகளிலும் இந்தியா 7.5 சதவிகித வளர்ச்சியை எட்டும் என்றும் உலக வங்கி கணித்திருந்தது. அந்த கணிப்பு முற்றிலும் பொய்யாகியுள்ளது.
கடந்த 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.3சதவிகிதம் ஆக ஜிடிபி உயர்ந்த நிலையில், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 2019-20 ஆம் நிதியாண்டின் மொத்த ஜிடிபி 4.2 சதவிகிதம் ஆக இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்குக் காரணமாக ஜிடிபி சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பு 2020-2021 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி விகிதமானது - 23.9% ஆக உள்ளது. இது கடந்த காலாண்டில் கொரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியான நிலையினையே சுட்டிக் காட்டுகின்றது.
விவசாயத்துறை தவிர உற்பத்தி துறை தொடங்கி அனைத்து துறைகளுமே சரிவை கண்டுள்ளது. அதிகம் சரிவை கண்டது கட்டுமானத்துறைதான் 50 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. விவசாயத்துறை மட்டுமே 3.4 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது.
கொரோனா தொற்றானது, சுகாதாரம், பொருளாதாரம், மக்களின் நல்வாழ்வு, வேலை வாய்ப்பு போன்றவற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தினையும் எதிர்மறையான மாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது என்று கடந்த ஜூலை மாதம் எஸ்பிஐ வங்கியின் 7வது பொருளாதார மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியிருந்தார்.
Recommended Video
அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது.
பொருளாதரத்தை மீட்டெடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் கடந்த மார்ச் மாதம் 1.15 சதவிகிதம் குறைக்கப்பட்டது. இருப்பினும் இந்தியாவின் ஜிடிபி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் இருந்து இந்தியா எப்போது மீளும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைய முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.