65 வருட சகாப்தம்.. முடிவிற்கு வந்த பொன்னான காலம்.. சென்னையின் "லக்கேஜ்" அடையாளம் விட்கோ மூடப்பட்டது!
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய லக்கேஜ் மற்றும் சூட்கேஸ் நிறுவனமான விட்கோ தங்கள் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டுடன், தமிழ்நாட்டு மக்களுடன் நெருக்கமான, உணர்வு பூர்வமான தொடர்பு கொண்ட விட்கோ மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுற்றுலாத்துறை என்பது உலகம் முழுக்க அதிக போட்டிக்குரிய துறை. இதில் சாதிப்பது என்பது மிக கடினம். அதிலும் பல வருடங்களுக்காக சுற்றுலாத்துறையில் கோலோச்சும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் போட்டியிட்டு வெல்வது என்பது மிக கடினம்.
அப்படிப்பட்ட சுற்றுலாத்துறையில் லக்கேஜ், பேக் மூலம் கோலோச்சிய தமிழ்நாட்டு நிறுவனம்தான் விட்கோ. 65 வருடமாக இந்தியாவில் விட்கோ நிறுவனம் மிக முக்கியமாக லக்கேஜ் மற்றும் சூட்கேஸ் நிறுவனமாக, ஷோ ரூமாக நிலவி வந்தது.
கையில் குழந்தை.. மறுகையில் சூட்கேஸ்.. தன்னம்பிக்கையுடன் தளர்வில்லாத நடை போடும் பெண்.. வைரல் போட்டோ
எப்படி
1951ல் இந்திய சுதந்திரத்திற்கு பின் தமிழகம் பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேற்றம் அடைந்தது. சிறிய சிறிய நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து பிராண்ட் போல மாற்றம் அடைந்தது. அப்படி ஒரு நிறுவனம்தான் 1951ல் ஜார்ஜ் டவுனில் தொடங்கப்பட்டது. வெஸ்ட் இந்தியா பிளாஸ்டிக் டிரேடிங் கோ என்ற பெயரில் எம்பிசி முகமது மூலம் பிளாஸ்டிக் விற்பனை நிறுவனம் தொடங்கப்பட்டது. வளர வளர இந்த நிறுவனம் விட்கோவாக மாறி.. புதிய பிராண்ட் ஆனது.
பிளாஸ்டிக்
முதலில் பிளாஸ்டிக் விற்பனையில் மட்டும் கவனம் செலுத்திய விட்கோ போக லக்கேஜ் விற்பனையில் இறங்கியது. சொந்தமாக லக்கேஜ் உருவாக்கி அதை விற்பனை செய்யும் முடிவில் இறங்கியது. விட்கோ பேக்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக வைரலாக, அந்த துறையில் வேகமாக விட்கோ வளர்ந்தது. விட்கோ பேக்ஸ், விட்கோ ஸ்கூல் பேக்ஸ், விட்கோ டிராலி, விட்கோ சூட்கேஸ் என்று விட்கோ நிறுவனம் உருவாக்கிய எல்லா பிராண்டும் மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.
கவனம்
1970ல் இருந்து வேகமாக, முழுக்க லக்கேஜ் விற்பனையில் மட்டுமே கவனம் செலுத்தி விட்கோ தனிப்பெரும் நிறுவனமாக உருவெடுத்தது. 1990ல் தமிழகம் முழுக்க பல இடங்களில் விட்கோ லக்கேஜ் ஸ்டோர்கள் தொடங்கப்பட்டன. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுக்க பல நகரங்களுக்கு விட்கோ விரிவடைந்தது. பின் தமிழகம் தாண்டி இந்தியாவின் மற்ற பிற மாநிலங்களிலும் உள்ள பெருநகரங்களுக்கும் விட்கோ விரிவடைந்து.
வடிவமைப்பு
அழகான வடிவமைப்பு, நீடித்த தரம், குறைந்த விலை, கஸ்டர்மர்களுடன் நல்ல தொடர்பு என்று விட்கோ நிறுவனம் தமிழக மக்கள் இடையே நெருக்கமான தொடர்பு கொண்டது. இந்த நிறுவனத்திற்கு என்று தனிப்பட்ட கஷ்டர்மர்கள் பல ஆண்டுகளாக இருக்கிறார்கள். எப்படி டிவிஎஸ், வசந்த் அன்ட் கோ எல்லாம் கஸ்டமர்கள் மீது கவனம் செலுத்தி தமிழகத்தில் வேகமாக வளர்ந்ததோ அதேபோல் விட்கோ நிறுவனமும் மக்கள் மீது கவனம் செலுத்தி வளர்ச்சி அடைந்தது.
ஷோ ரூம்கள்
கடந்த 2010க்கு பின் புதுப்பொலிவு பெற்ற விட்கோ தமிழகம் முழுக்க பல இடங்களில் சிறிய மற்றும் பெரிய ஷோரூம்களை உருவாக்கி லக்கேஜ் விற்பனையில் வேகம் எடுத்து. சென்னையின் வளர்ந்த நிறுவனங்களில் ஒன்றாக விட்கோ வளர்ந்தது. விட்கோ வேகமாக வளர்ந்து வந்த நிலையில் மூன்றாம் தலைமுறையாக அல்தாப் ஹாரிஸ், அமீனா ஹாரிஸ் ஆகியோர் விட்கோ நிறுவனத்தை ஏற்று நடத்த தொடங்கினார்கள். இந்த நிலையில் கொரோனா பரவலால் இந்த நிறுவனம் பெரிய சரிவை சந்தித்தது.
சரிவு
சுற்றுலாத்துறை, பயணம், பள்ளி திறப்பு எல்லாம் மொத்தமாக கொரோனாவால் காலியான நிலையில் விட்கோ நிறுவனம் லக்கேஜ் விற்பனை இன்றி 2 வருடமாக கஷ்டப்பட்டது. போதிய பேக், லக்கேஜ் விற்பனை இல்லாமல் அந்த நிறுவனம் பெரிய இழப்பை சந்தித்தது.
கஷ்டம்
அதிலும் இரண்டாம் அலை பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக பெரிய இழப்பை சந்தித்தது. கடந்த ஒன்றரை வருடமாக பெரிதாக விற்பனை இன்றி அந்த நிறுவனம் முடங்கியது. இதனால் சென்னை தாண்டி பல இடங்களில் விட்கோ ஷோ ரூம் மூடப்பட்டு வந்தது. தற்போது பெரிய இழப்பு காரணமாக மொத்தமாக விட்கோ நிறுவனம் மூடப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தை மூடுவதாக விட்கோ அறிவித்துள்ளது.
நிறுவனம் மூடல்
65 வருடமாக மக்களுக்கு நெருக்கமாக... சென்னையின் ஒரு அடையாளமாக விளங்கி வந்த விட்கோ தற்போது மொத்தமாக தங்கள் விற்பனையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. மக்கள் மத்தியில் விட்கோவின் முடிவு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அதிலும் 60-50 வருடமாக இந்த நிறுவனத்திற்கு கஷ்டமர்களாக இருந்தவர்கள் விட்கோவின் முடிவால் கலங்கிப் போய் உள்ளனர்.