Exclusive: மு.க.ஸ்டாலின் போடப் போகும் முதல் கையெழுத்து.. ஆர்.எஸ். பாரதி அதிரடி
சென்னை: திமுக மீது சுமத்துவதற்கு எந்தப் பழியும் எதிர்த் தரப்பிடம் இல்லை. இதனால் வாரிசு அரசியல் என்ற பழைய பல்லவியைப் பாடுகின்றனர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
சட்டசபைத் தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள், அதன் பிரச்சார வேகம் உள்ளிட்டவை குறித்து ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு பிரத்யேகமாக ஒரு பேட்டி கொடுத்தார் ஆர்.எஸ். பாரதி.
அந்தப் பேட்டி விவரம்:
கேள்வி: திமுகவை பொருத்தவரையில் தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஹீரோ என்பார்கள். இந்த முறையும் அதிரடி காட்டப்படுமா? அதிக அளவிலான இலவசத் திட்டங்களை இந்த முறையும் திமுக அறிவிக்குமா?
பதில்: தேர்தல் அறிக்கை குறித்து எதுவும் தற்போது சொல்ல இயலாது. தேர்தல் அறிக்கை என்பது டி.ஆர்.பாலு தலைமையிலான குழு தயாரித்து வருகிறது. திமுகவை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு தேர்தலிலும் சிறப்பான அறிக்கையை தயாரிக்கும். அவை எல்லாவற்றையும் மிஞ்கின்ற வகையில் இந்தாண்டு தேர்தல் அறிக்கை அமையும்.
கேள்வி: உதயநிதி ஸ்டாலின் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா?
பதில்: தலைவர் உள்ளிட்ட யார் யார் போட்டியிடுவது என்பதனை தலைமை தான் முடிவு செய்யும்.
கேள்வி: அதிமுகவின் ஆட்சிக்கு மார்க் போட்டால் நீங்கள் எவ்வளவு கொடுப்பீர்?
பதில்: ஜீரோ மார்க் தான் கொடுக்க வேண்டும்.
கேள்வி: எந்த மாதிரியான நம்பிக்கையுடன் இந்த சட்டசபைத் தேர்தலை திமுக சந்திக்கிறது?
பதில்: நாடாளுமன்ற தேர்தலில் எந்த நம்பிக்கையுடன் தேர்தலை சந்தித்தோமோ, அதேபோல் இரண்டு மடங்கு தைரியத்துடன் இந்த தேர்தலை சந்திக்கிறோம்.
கேள்வி: வாரிசு அரசியல் என்ற ஒரு குற்றச்சாட்டு இன்று வரை திமுகவை விடாமல் துரத்துகிறது. இந்த வாதம் இப்போது வரை விஸ்வரூபம் எடுத்து நிற்பது குறித்து உங்களது கருத்து என்ன?
பதில்: இன்று நேற்றல்ல கடந்த 5 ஆண்டு காலமாக திமுக மீது வேறு எந்த பழியும் சொல்ல முடியாததால் வாரிசு அரசியல் என்று சொல்லுகிறார்கள். அதிமுக தான் வாரிசு அரசியல் செய்கிறது.
கேள்வி: 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுக, ஆளுங்கட்சிக்கு நிகரான பொருளாதார பலத்துடன் தேர்தல் களத்தில் நிற்க முடியுமா?
பதில்: திமுகவில் ஆழமான வலிமை இருக்கிறது. 1952 முதலே ஒவ்வொரு தேர்தலிலும் திமுக தனது பலத்தை கூட்டிக்கொண்டேதான் வருகிறது. ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி என்பதை விட, தொண்டர்கள் சார்ந்த கட்சி என்றால் அது தான் திமுக.
கேள்வி: இந்த தேர்தலில் திமுகவுக்கு மிகப் பெரிய சவாலாக எதை நினைக்கிறீர்கள்?
பதில்: இரண்டு ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து நாங்கள் நிற்கிறோம் என்பது தான் திமுகவின் சவால். இந்நிலையில் இரண்டு அரசாங்கத்தின் மீது மக்களின் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. எல்லோரும் இந்த 2 ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயிகள் மத்திய அரசாங்கத்தின் வேளாண் சட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசிற்கு எதிர்ப்பு உருவாகி வருகிறது, அதேபோல் தமிழகத்தில் பணப் புழக்கமே இல்லை. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் ஒரு கூட்டதிற்குள்ளே இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
கேள்வி: ஆளுநரிடம் பல்வேறு ஊழல் புகார்கள் குறித்து மனு கொடுத்துள்ளீர். அதுதொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து பதில் ஏதும் வந்ததா?
பதில்: ஆளுநரிடம் புகார் அளித்தது, ஒரு சட்ட ஆதாரத்திற்காக. ஏனென்றால், திமுக ஆட்சிக்கு வந்தால் பழிவாங்குவோம் என்று மக்கள் குறை கூறுவர் என்பதற்காகவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற புகாரை ஏற்று தான், ஜெயலலிதா மற்றும் சசிகலா வுக்கு தக்க தண்டனையும் வழங்கப்பட்டது.
கேள்வி: திமுக சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தால், மத்திய அரசுடன் எந்த மாதிரியான அணுகுமுறையை எதிர்பார்க்கலாம்? பாஜகவுடன் அனுசரித்துப் போகுமா அல்லது முரண்டு பிடிக்குமா?
பதில்: அண்ணா, கலைஞர் எவ்வழியோ அவ்வழியை நாங்களும் பின்பற்றுவோம்.
கேள்வி: அதிமுக இதுபோல பிளவுபட்டு இருப்பதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் என நினைக்கறீர்களா?
பதில்: சொந்த பலத்தை நம்பியே தேர்தலை நிற்கிறோம். எதிரிகளின் பலவீனம் எங்களுக்கு கவலையல்ல.
கேள்வி: சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் அதிமுக பலமாகிவிடும் என்ற ஒரு கருத்து இருப்பது உண்மையா?
பதில்: இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்...
கேள்வி: திமுக கூட்டணிக்கு எந்தெந்த கட்சிகளெல்லாம் புதிதாக வர வாய்ப்பு உள்ளது? கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக உள்ளதா அல்லது சிக்கல் ஏதேனும் எழுந்துள்ளதா?
பதில்: கூட்டணி கட்சிகள் குறித்து தலைவர் தான் முடிவு செய்வார்.
கேள்வி: திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் முதல் கையெழுத்து எதற்காக இருக்கும்?
பதில்: எந்த முடிவாக இருந்தாலும் தேர்தல் அறிக்கை வெளியிடும் போது தலைவர் அதனை அறிவிப்பார்...