"பாதுகாப்பில் சமரசம் கிடையாது.." உலகிலேயே பொறுப்பு மிக்க நாடாக இந்தியா உள்ளது.. ஜெய்சங்கர் பேச்சு
சென்னை: நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசத்திற்கு இந்தியா இடம் கொடுக்காது. உலகத்திலேயே மிகவும் பொறுப்பான நாடாகவும், இந்திய பெருங்கடல் எல்லையில் வலிமையான, மிக முக்கியமான நாடாக இந்தியா திகழ்வதாக சென்னையில் நடைபெற்ற துக்ளக் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
'துக்ளக்' இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகடமியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்றார்.
விழாவில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழாவில் மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ எழுதிய 'நினைத்து பார்க்கிறேன்' என்ற நூலின் தொகுப்பை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார். பின்னர் விழாவில் ஜெய்சங்கர் பேசியதாவது:-

உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக
இந்தியாவில் இருந்து சுமார் 3 கோடி மக்கள் வெளிநாட்டில் பணி செய்து வருகின்றனர். பிற நாடுகளை ஒப்பிடும் போது இந்திய மக்களே அதிக அளவில் வெளி நாடுகளில் பணி செய்து வருகின்றனர். வெளிநாடுகளில் பணி புரியும் இந்தியர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 'உக்ரைன்' மீதான ரஷியா போரில் அங்கு வாழும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக இருந்தது.

முடிவுகளை தைரியமாக எடுக்கிறது
உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா 5-வது மிகப்பெரிய நாடாக உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறி விடும். அந்த அளவு பொருளாதாரத்தில் இந்தியாவின் தாக்கம் மிகுதியாக எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் தேசிய அளவில் பல்வேறு முக்கிய முடிவுகளை தைரியமாக மத்திய அரசு எடுத்து இருக்கிறது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசத்திற்கு இந்தியா இடம் கொடுக்காது.

பொறுப்பான நாடாக இந்தியா
உலகத்திலேயே இந்தியா மிகவும் பொறுப்பான நாடாக விளக்குகிறது. இந்திய பெருங்கடல் எல்லையில் வலிமையான, மிக முக்கியமான நாடாக திகழ்கிறது. பயங்கரவாதத்தை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பிற நாடுகள் கூட பெருமையுடன் பார்க்க தொடங்கியுள்ளன. பிற நாடுகளை விட நமது வேகம் அதிகமாக இருக்கிறது. உலக நாடுகளில் பறந்து விரிந்த நிலப்பரப்பு கொண்ட நிலப்பரப்பும் வரலாற்று சிறப்புகளையும் கொண்ட ஒரு நாடு இந்தியா.

உலக நாடுகள் மத்தியில் கவனம்
முன்பு வணிக தளமாக பார்க்கப்பட்ட இந்தியா, இன்று முன்னணி நாடாக உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியாவின் வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் அது உலக நாடுகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் கொரோனா காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்கியது. 100 உலக நாடுகளுடன் கூட்டணி வைத்து, 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கி உலக நாடுகள் மத்தியில் கவனம் பெற்றது.

மக்கள் நலத்திட்டங்கள்
வளரும் நாடுகளில் இந்தியா மிக முக்கியமான இடத்திலுள்ளது. உலக நாடுகளுடன் நட்புறவிலும் இந்தியா சிறந்த நாடாக இருக்கிறது. இதனாலேயே உலக நாடுகளுக்கு மிகவும் முக்கிய தேவையான நாடாக இந்தியா தற்போது மாறி வருகிறது. 'பெண் குழந்தைகளை வளர்ப்போம் பாதுகாப்போம்' போன்ற மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள், உலக அளவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.












Click it and Unblock the Notifications