இந்தியாவுக்கு தேசிய மொழி கிடையாது.. ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அரசு பதில்.. கனிமொழி வரவேற்பு!
சென்னை: இந்திய நாட்டிற்கு என்று தனியாக தேசிய மொழி கிடையாது என மத்திய அலுவல் மொழிகள் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், மத்திய அரசிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், அதற்கு இந்தியிலேயே பதில்கள் அனுப்பப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா எதிரொலி.. தமிழ்நாட்டில் கூடுதலாக இந்த 4 நகரங்களில் நீட் மையங்கள்.. மத்திய அரசு அறிவிப்பு
எங்கும், இந்தி, எதிலும், இந்தி, என்று மத்திய பாஜக அரசு இந்தி திணிப்பை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.
இந்தியில் பதில்கள்
இந்த நிலையில்தான், தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர் பாண்டியராஜாவிற்கு, யானைகள் மீது ரயில்கள் மோதல் தொடர்பாக ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, சில வடமாநிலங்களின் ரயில்வே கோட்ட அதிகாரிகள் இந்தியில் பதில் அளித்திருந்தனர். மேலும் சிலரது கேள்விகளுக்கு இதே முறையில் பதில் அனுப்பப்பட்டிருந்தது.
ஆர்டிஐ கேள்வி
இதனால் அதிருப்தியடைந்தார் சமூக ஆர்வலர் பாண்டியராஜா. எனவே, இந்திய மொழிகள் சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். உள்துறை அமைச்சகம் இக்கேள்விகளை மத்திய அலுவல் மொழிகள் துறைக்கு அனுப்பியிருந்தது.
இந்தியாவுக்கு தேசிய மொழி இல்லை
அந்த துறையினர் தந்த பதிலில், "இந்தியாவிற்கு என தேசிய மொழி எதுவும் கிடையாது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால், எந்த மொழியில் பதிலளிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக அலுவல் மொழிகள் துறை சார்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தகவல் தரும் அதிகாரி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு, இந்தியில் பதிலளித்தால் அவருக்கு எந்த தண்டனையும் கிடையாது. அலுவல் மொழி விதிகள் 1976 தமிழ்நாட்டிற்கு பொருந்தாது" என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உறுதி செய்தது
ஏற்கனவே, பல வருடங்கள் முன்பு, குஜராத் உயர் நீதிமன்றமும், இந்தியாவுக்கு தனியாக ஒரு தேசிய மொழி கிடையாது என்று கூறியிருந்தது. இப்போது உள்ள மத்திய அரசும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதை தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். அரசியல் சாசனச் சட்டத்தின் 343வது பிரிவின்படி இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவலக மொழி இந்தி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வைத்துதான் இந்திரா காந்தி காலம் தொட்டு அடுத்தடுத்து பல அரசுகள் இந்தி திணிப்பை தீவிரப்படுத்தின. இப்போதுள்ள மத்திய அரசு இதில் மிக தீவிரம் காட்டியது. தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, கேரளாவிலிருந்தும் அதற்கு எதிர்ப்புகள்கிளம்பியுள்ளன.
கனிமொழி வரவேற்பு
இதுகுறித்து கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பல வருடங்களாக இதைத்தான் மத்திய அரசுக்கு நாங்கள் சொல்லி வருகிறோம். பிற மொழி நிதியைப் பயன்படுத்தி ஒரே ஒரு மதத்தை விளம்பரப்படுத்துவதை தயவு செய்து செய்யாதீர்கள். இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.