பேசும் முன் யோசியுங்கள்... ப்ளீஸ் வளருங்கள் - ராகுல் காந்தியை கிண்டலடிக்கும் குஷ்பு
புதுச்சேரியில் தமிழ் மக்கள் எங்களைத்தான் நம்பியுள்ளனர் என்று குஷ்பு கூறியுள்ளார். பேசும் முன்பாக யோசியுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை: பேசும் முன்பாக நன்றாக யோசியுங்கள் ராகுல் ஜி... புதுச்சேரியில் பாஜக அரசுதான். தமிழ் மக்கள் எங்களைத்தான் நம்பியுள்ளனர் என்று நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு கூறியுள்ளார். நீங்கள் பேசும் ஒவ்வொரு முறையும் நீங்கள் தடுமாறுவதைப் பார்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் குஷ்பு கிண்டலடித்துள்ளார்.
Recommended Video
லோக்சபாவில் ராகுல்காந்தி பேசிய பேச்சுக்கள் அதிகமாக பகிரப்படுகின்றன. அவரது ஒவ்வொரு பாயிண்ட்டும் பாஜக அரசுக்கு சரியான அடியாக இருந்தது. இது மன்னர் ஆட்சியல்ல பல மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, அனைவருக்கும் தனி தனி கலாச்சாரம் உள்ளது என்று குறிப்பிட்டார்.
பல பூக்கள் இணைந்த பூங்கொத்துதான் இந்தியா என்றும் குறிப்பிட்டார் ராகுல் காந்தி. நீங்கள் இரண்டு இந்தியாவை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என்று பிரித்து வைத்திருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார்.

தமிழகத்தை ஆளவே முடியாது
இந்தியாவுக்கு மன்னர் ஒருவரை கொண்டுவர பாஜக நினைக்கிறது. ஆனால் 1947ம் ஆண்டுடன் அந்த கதை முடிந்துவிட்டது. பாஜகவினர் தங்களது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சி செய்யவே முடியாது என்று ஆவேசமாக பேசினார் ராகுல்காந்தி.

பணக்காரர்கள்
இந்தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் என அத்தனையும் ஒருநபருக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டீர்கள். இந்தியா இப்படியே அமைதி காத்து கொண்டிருக்கும் என நினைத்துவிடாதீர்கள். இந்தியாவின் 55 கோடி மக்களிடம் இருக்கும் சொத்துகளை விட 100 பணக்காரர்களிடம்தான் அதிக சொத்துகள் இருக்கின்றன. உங்களுக்கு இந்தியாவின் வரலாறு தெரியவில்லை.

பிரச்சினைகள்
நீங்கள் இப்போது செய்து கொண்டிருப்பது, கையாளும் விதம் மிக மிக ஆபத்தானது. இதனை நீங்கள் நிறுத்தியாக வேண்டும். நீங்கள் நிறுத்தாமல் போனால் பிரச்சனைகள் உருவாகும். ஏற்கனவே பிரச்சனைகள் வெளிப்பட தொடங்கிவிட்டன. கடந்த 50 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவு வேலைவாய்ப்பின்மை சிக்கல் உருவாகி இருக்கிறது. இந்த நாட்டின் 23 கோடி மக்களை வறுமையில் தள்ளிவிட்டுள்ளீர்கள் என்று குற்றம் சாட்டினார்.

குஷ்பு ட்வீட்
ராகுல்காந்தியின் கருத்துக்கு பலரும் ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர் #RahulGandhi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது. பாஜகவினர் பலரும் ராகுல்காந்தியின் கருத்துக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பதிவிட்டுள்ளார். பேசும் முன்பாக யோசியுங்கள் ராகுல்காந்தி என்று பதிவிட்டுள்ளார்.

தடுமாற வேண்டாம்
நீங்கள் எப்போது கற்றுக்கொள்வீர்கள். தயவு செய்து உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் ராகுல் ஜி. புதுச்சேரியில் பாஜக ஆட்சிதான். தமிழ் மக்கள் எங்களை நம்பியுள்ளனர் என்றுதான் அர்த்தம். ப்ளீஸ் வளருங்கள். அதிக நேரம் பேசும் முன்பாக யோசியுங்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு முறையும் தடுமாறுவதைப் பார்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் குஷ்பு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். @BJP4இந்தியா என்றும் தெரிவித்துள்ளார் குஷ்பு.

புதுச்சேரியில் பாஜக ஆட்சியா?
புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இருக்கிறார். ஆனால் குஷ்பு தனது ட்விட்டரில் புதுச்சேரியில் பாஜக ஆட்சி நடக்கிறது என்றும் தமிழர்கள் பாஜகவை நம்பித்தான் உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications