இந்தி மாத கொண்டாட்டம்! புதிய கல்விக்கொள்கையின் அஜென்டா இது! திருமாவளவன் அட்டாக்
சென்னை: சென்னை தூர்தர்ஷனில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கத்தைதான் பொதிகை தூர்தர்ஷன் மூலம் நடைமுறைப்படுத்த பார்க்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.
தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான இந்தி திணிப்பு என்று பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.

திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பொதிகை எனும் பெயரை நீக்கியிருக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கத்தைதான் பொதிகை தூர்தர்ஷன் மூலம் நடைமுறைப்படுத்த பார்க்கிறார்கள்” என்று விமர்சித்திருக்கிருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். "இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலானவர்களால் பேசப்படும் 122 மொழிகளும், 1599 பிற மொழிகளும் உள்ளன. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு எனும் போது ஒரு மொழியை மட்டும் கொண்டாடுவதற்கு எந்த நியாயமும் இல்லை. 1700-க்கும் கூடுதலான மொழிகள் பேசப்படும் நாட்டில், அதிலும் குறிப்பாக உலகின் மூத்த மொழியான தமிழ் பேசப்படும் மாநிலத்தில் இந்திக்கு மட்டும் விழா எடுக்கப்பட்டால் அது நாட்டின் பன்முகத்தன்மையை பாதிக்கும். இதற்கு மத்திய அரசே காரணமாக இருக்கக் கூடாது.
சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழாவும் இன்று கொண்டாடப்படும் நிலையில், கடந்த ஐம்பதாண்டுகளில் அது தமிழுக்கு என்ன செய்தது? எந்தெந்த வகைகளில் தமிழ்மொழி சிறந்தது என்பதை விளக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சென்னைத் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருக்கலாம்.
அதை விடுத்து இந்தியை மட்டும் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இன்று நடைபெறவுள்ள இரு விழாக்களில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும்" என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications