2 + 2 லட்டு.. திருமாவளவனுக்கு வந்த ஆசை.. கூட்டணி மாறுகிறதா.. சனாதன சக்தி Vs சனநாயக சக்தி.. அப்பறம்?
திமுகவுடன் இந்த முறையும் கூட்டணி வைப்பதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்
சென்னை: திருமாவளவன் தன்னுடைய விருப்பம் ஒன்றை வெளிப்படுத்தி உள்ளார்.. விரைவில் 60-வது பிறந்தநாள் விழாவை கொண்டாட உள்ள நிலையில், அந்த பிறந்த நாள் கூட்டத்தை, அனைவரும் உற்றுநோக்கும்படியான எண்ணத்தையும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 17ம் தேதி தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு, திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்..
அதில், தன்னுடய அகவை அறுபதுக்கான அரசியலின் அறைகூவல் என்று மிக முக்கியமான விஷயம் ஒன்றையும் அந்த அறிக்கையில் சொல்லி உள்ளார்.

ஆசைகள்
அந்த முக்கிய குறிக்கோள்கள் இவைதான்: "சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்.. சனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம்" என முன்மொழிகிறோம். அதாவது, சனாதனிகளின் ஒற்றை முகமாக களத்தில் முன்னிற்கும் பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரங்களை தேர்தல் அரசியல் மற்றும் கருத்தியல் அடிப்படையில் தனிமைப் படுத்துவோம் என்பதே இவ்வாண்டுக்கான கருப்பொருளாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு ஓராண்டுக்கான செயல்திட்டங்களை வரையறுப்போம். மண்டலவாரியாக தமிழகத்திலும் மற்றும் பிற மாநிலங்களிலும் இக்கருப்பொருளில் மக்கள் இயக்கத்தை மேற்கொள்வோம்.

சங்கத்துவம்
2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அகில இந்திய அளவில் இடதுசாரி முற்போக்கு சக்திகள் மற்றும் பிற சனநாயக சக்திகள் யாவரையும் சிதறவிடாமல் ஒருங்கிணைத்திட உரிய முயற்சிகளை முன்னெடுப்போம். மத அடிப்படையில் பெரும்பான்மைச் சமூகத்தின் நலன்களை முதன்மைப்படுத்துகிற கருத்தியல் என்பதால், இந்துத்துவம் என்பதை சங்கத்துவம் என அடையாளப்படுத்துவதே பொருத்தமாகும்... சனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சங்கத்துவத்தை வீழ்த்தி சமத்துவ இந்தியாவைக் கட்டமைப்போம். இதுவே எனது அகவை அறுபதுக்கான அரசியல் அறைகூவல்" இவ்வாறு தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

பாஜகவுக்கு பயம்
2 நாட்களுக்கு முன்பு பீகாரில் பாஜகவை கழட்டி விட்டு நிதிஷ்குமார், தனி கூட்டணி ஆட்சியை நிலைநாட்டி உள்ளார்.. 2 வருடங்களாகவே முட்டல் மோதலுடன் அந்த கூட்டணி இருந்து வந்த நிலையில், கடைசியில் பாஜகவை தூக்கி எறிந்தார்.. ஆடிக் கொண்டிருந்த ஆட்டத்தை கலைத்து மறுபடியும் ஆடி உள்ளார்.. பாஜகவுக்கு ஒருவித பயத்தை இதன்மூலம் காட்டியிருந்தார்.. நிதிஷின் இந்த துணிச்சலை பல்வேறு தலைவர்கள் பாராட்டி வாழ்த்து சொன்னார்கள்.. அந்த வகையில், நம் முதல்வரும் வாழ்த்து சொன்னார்..

உயிர்ப்பிக்கும் கூட்டணி
திருமாவளவனும் நிதிஷூக்கு வாழ்த்து சொன்னதுடன், அனைத்து கட்சிகளுக்கும் ஒரு வேண்டுகோளையும் ஒன்றை விடுத்தார். "பீகாரில் பாஜகவிற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையில் நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்று. பாஜக கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளார்.. அது ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் கூட்டணியாக விளங்குகிறது. இந்தியா முழுவதும் இது போல் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து பாசிச பாஜக என்று கடுமையான விமர்சனத்தையும் முன்னிறுத்தினார்.

வார்னிங் தந்த திருமாவளவன்
அதேபோல, இன்னொரு சலசலப்பும் விசிக தொடர்பாக எழுந்தது.. சமீபகாலமாகவே அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திருமா எடுத்து வருவதாக சொல்லப்பட்டது.. சில சமயம் அதிமுக தொண்டர்கள் குறித்து புகழ்ந்து ட்வீட்களை பதிவிட்டதுடன், பாஜகவுடன் அதிமுக கவனமாக இருக்க வேண்டும், இந்த எச்சரிக்கையை நான் சொல்வது அதிமுக தலைவர்களுக்காக அல்ல, அதிமுக தொண்டர்களுக்காக" என்றும் கூறியிருந்தார்.

கரிசனம்
பாஜக குறித்து எச்சரிக்கவே திருமா இப்படி சொன்னாலும், அதிமுக மீது திடீரென கரிசனம் ஏன் என்ற சந்தேகம் அப்போது எழுந்தது.. ஆனால், அது கரிசனம் இல்லை, தமிழகத்தின் ஒட்டுமொத்த நலன் என்பது பிறகுதான் மெல்ல மெல்ல புரிந்து கொள்ளப்பட்டது.. எனினும், அப்போது ஒரு தனியார் டிவி சேனலில் திருமாவிடம் "வரும் எம்பி தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க போகிறீர்கள்" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு திருமா, "பாஜகவின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால், அதன் வளர்ச்சியை தடுக்க, இதே திமுக கூட்டணி, அடுத்த தேர்தலிலும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்" என்று பகிரங்கமாகவே பதிவு செய்தார்.

திருமா ஆசை
ஆக, எம்பி தேர்தலில் திமுகவுடனான கூட்டணி என்பதை பதிவு செய்த அதேசமயம், பாஜகவை எதிர்க்கும் விஷயத்திலும் விசிகவுக்கு மும்முரம் கூடிவருகிறது.. தன்னுடைய 60வது நாள் பிறந்த நாள் விழாவிலும்கூட, "சனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சங்கத்துவத்தை வீழ்த்தி சமத்துவ இந்தியாவைக் கட்டமைப்போம்" என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியதன் நோக்கமும் அதுவாகவே இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. விசிகவின் இந்த குறிக்கோள் ஈடேறுமா? திருமாவின் ஆசை நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications