ராஜராஜன் இந்துவா? வெற்றிமாறன் சொன்னது சரிதான்.. அவர் ‘பெரியாரின் பேரன்’- ஆதரவாக குதித்த திருமாவளவன்!
சென்னை : ராஜராஜ சோழன் பற்றிய இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு குறித்து சர்ச்சைகள் கடுமையாக எழுந்து வரும் நிலையில், வெற்றிமாறன் பெரியாரின் பேரன் எனத் தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
சமீபத்தில் நடைபெற்ற திருமாவளவன் மணி விழா நிகழ்வின்போது, ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜ ராஜ சோழன் பற்றிய இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் திருமாவளவன்.

இயக்குநர் வெற்றிமாறன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவையொட்டி ஆவணப்படம் திரையிடல் விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்று பேசியபோது, "சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது. சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாக சென்றடையும் கலைவடிவம். கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும்.

ராஜராஜ சோழன் - இந்து மதம்
தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களைப் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்." என்று பேசினார். இதற்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எச்.ராஜா, வானதி சீனிவாசன் குஷ்பூ, இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

சதி வேலை - பாஜக விமர்சனம்
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சை மண்ணில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்தவர் ராஜராஜ சோழன். ஆனால், அந்நிய மதங்களை இந்த மண்ணில் நிலைநிறுத்துவதற்காக, இந்து மத கலாசாரம் மற்றும் அடையாளங்களை அழிக்க பல நூறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அது இன்னமும் நிற்காமல் தொடர்கிறது என்பதன் சாட்சி தான் வெற்றிமாறனின் பேச்சு என விமர்சித்தார்.

அக்காலத்தில் ஏது இந்து?
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து?

பெரியாரின் பேரன்
இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர். போராடவும் செயகின்றனர். இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர் மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications