திருமாவளவன் தெளிவாக முடிவு எடுப்பார்.. தவெகவுடன் கூட்டணி போக மாட்டார்.. விஜய்யை விடாத சீமான்
சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் சீமான், தமிழக வெற்றிக் கழகத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைக்காது என்று கூறினார். மேலும், நானே கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறும் போது என்னை விட மூத்தவர், அனுபவமிக்கவர் திருமாவளவன். அவர் எவ்வளவு ஆழ்ந்து யோசித்து இருப்பார். கட்டாயமாக அவர் தவெகவுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று சீமான் பேசினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சாதியும், மதமும், மொழியும், இனமும் ஒன்று கிடையாது. சும்மா டயலாக்குக்காக எதுகை, மோனையில் பேசக்கூடாது. அங்கு ஒரு கால், இங்கு ஒரு கால் என்று வைத்து நிற்க கூடாது. ஒன்னு இந்த பக்கமாக நிக்கனும், இல்லாட்டி அந்த பக்கமாக நிற்க வேண்டும். இரண்டு பக்கமும் கால் வைத்துக்கொண்டு நிற்க கூடாது.

திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்று விஜய் கூறுகிறார். விஷமும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?.. திராவிடம் என்றால் என்ன என்று விஜய் விளக்குவாரா?.. தமிழ் தேசியம் என்றால் என்ன என்று விஜய் விளக்குவாறா?.. வில்லனும் நடிகரும் எப்படி ஒன்றாக முடியும். வில்லனை எதிர்த்தால் தான் நடிகர். சமீபத்தில் அவர் நடித்த கோட் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தையும், ஹீரோ கதாபாத்திரத்தையும் அவரே நடித்து இருப்பார்.
இதனால் தான் இப்படி பேசிவிட்டார் என்று நினைக்கிறேன். திராவிடமும், தமிழ் தேசியமும் வேறு வேறு தான். கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் ஆளுநர் பதவியில் இருக்கிறார். ஆளுநர் வேண்டாம் என்று விஜய் சொல்கிறார். ஆனால் ஏன் வேண்டாம் என்று காரணத்தை சொல்ல வேண்டும் அல்லவா.. அதை சொல்லவில்லையே. ஆளுநர் தேவையில்லாத பதவி.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதிக்கு இல்லாத தகுதி எப்படி நியமனம் செய்யப்பட்ட ஒருவருக்கு இருக்கிறது. இது என்ன ஜனநாயகம். மக்கள் ஆட்சி இதில் எங்கே இருக்கிறது. 2 கோடி பேரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு இல்லாத அதிகாரம் மத்தியில் ஆளும் அரசால் நியமனம் செய்யப்பட்ட ஒருவருக்கு எப்படி இருக்கிறது?.. மக்களுக்கான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக காக்க வைக்கப்பட்டிருக்கிறது.
பாஜக, திமுவை எதிரி என்று சொல்லும் விஜய், காங்கிரஸ் மற்றும் அதிமுக எதிரி இல்லை என்று சொல்லவில்லை. அதிமுக ஊழல் செய்யவே இல்லையா.. இதேபோல் பாஜகவும் காங்கிரசும் ஒன்று தான். இரண்டு கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. காங்கிரசும் மத கட்சி தான். பாஜக மத கட்சி என்றால், காங்கிரஸ் மத கட்சி இல்லையா. என விஜய்யை விமர்சித்து சீமான் பேசினார்.
தொடர்ந்து ஒரே நிகழ்வில் தவெக தலைவர் விஜய்யும், விசிக தலைவர் தொல் திருமாவளவனும் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் தவெகவுடன் விசிக கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைக்காது. விசிக தலைவர் தொல் திருமாவளவன் பெரியவர். எனது ஆசிரியர். எப்போதுமே அவர் சிந்தித்து தெளிவான முடிவை தான் எடுப்பார். நானே கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறும் போது என்னை விட மூத்தவர், அனுபவமிக்கவர் திருமாவளவன். அவர் எவ்வளவு ஆழ்ந்து யோசித்து இருப்பார். கட்டாயமாக அவர் தவெகவுடன் கூட்டணி வைக்க மாட்டார். இவ்வாறு சீமான் கூறினார்.
வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் நடிகர் விஜய்யும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திருமாவளவன் புத்தகத்தை வெளியிட அதனை விஜய் பெற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
விஜய் திமுக தான் அரசியல் எதிரி என்று கூறியதும், கூட்டணி வைக்க தயார் என்று சொன்னதோடு, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கூறினார். மேலும் மாநாட்டின் போது அதிமுகவை பற்றி விஜய் விமர்சிக்கவே இல்லை. இதனால் விஜய்யுடன் அதிமுக கூட்டணி வைக்கலாம் என்ற ஒரு யூகம் கொடிகட்டி பரவியது. இதேபோன்று ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்று கூறியிருப்பதால் விசிகவும் விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
எனினும் விஜய்யின் கொள்கை புரியவில்லை என்று விமர்சித்த திருமாவளவன் தவெகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் ஒரே நிகழ்வில் திருமாவளவன், விஜய் பங்கேற்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இது பற்றி தான் சீமான் மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications