திருப்பரங்குன்றத்தில் கலவர நோக்கம் கொண்ட செயல்.. பொய் கூறும் சங்பரிவார் அமைப்புகள்.. ரகுபதி விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட செயலை அனுமதிக்க முடியாது என்பதே தமிழக அரசு நிலைப்பாடு என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் முருகர் கோவில் இருக்கும் மலையில் காலங்காலமாக தீபம் ஏற்றப்படும் அதே இடத்தில் கடந்த 3 ஆம் தேதியன்று தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் 'தீபம் ஏற்றவிடவில்லை' என்று சங்பரிவார் அமைப்புகளின் பொய்யை கூறி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு 144 தடை உத்தரவு அமல்படுத்தி தடுத்து நிறுத்தியது. தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

அதனை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்த நிலையில், நேற்று மீண்டும் கார்த்திகை தீபம் ஏற்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனாலும் சட்டம் - ஒழுங்கு காரணம் காட்டி போலீசார் மலையேறுவதற்கு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து சில மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பின்னர் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு மீண்டும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த போது, அதனை டிசம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் ஒத்தி வைத்தார். இதனிடையே தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்றத்திலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை திமுக கையில் எடுத்து பேசி வருகிறது.
இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருப்பரங்குன்றம் முருகர் கோவில் இருக்கும் மலையில் காலங்காலமாக தீபம் ஏற்றப்படும் அதே இடத்தில் கடந்த 3 ஆம் தேதியன்று தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் 'தீபம் ஏற்றவிடவில்லை' என்று சங்பரிவார் அமைப்புகளின் பொய்யை கூறி வருகின்றனர்.
மத்தியப் படையை வைத்து தீபம் ஏற்ற வேண்டும் என மாநிலத்தின் உரிமைகளையே கேள்விக்குள்ளாக்குகின்றன. இதனை பார்த்து ஊடகங்கள் அமைதி காப்பது முறையா? அமைதிமிகு தமிழ்நாட்டில் கலவர எண்ணத்தோடு ஒரு கும்பல் முயற்சிப்பதைத்தான் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட இந்த செயலை அனுமதிக்க முடியாது என்பதே அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications