முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து வைத்த கோரிக்கை இதுதான்: அரசு தகவல்
நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவேண்டும் என ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் வலியுறுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் முக்கிய கோரிக்கையாக, நீட் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு விலக்கு மசோதா: குடியரசு தலைவருக்கு சீக்கிரம் அனுப்புங்க- ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்
ஆளுநருடன் திடீர் சந்திப்பு
முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆளுநரை சந்தித்து கோரிக்கை ஒன்றை வைத்தார், அதில் நீட் தேர்வு குறித்த மசோதாவை உடனடியாக குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார், இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
ஏ.கே.ராஜன் குழு அமைப்பு
"மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதலமைச்சர் அமைத்தார்.
ஆணையம் பரிந்துரை சட்டப்பேரவையில் தீர்மானம்
இக்குழுவானது நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்தும், மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களைத் தீர ஆராய்ந்தும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, இந்த பாதிப்புகளை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது.
இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 'தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு' நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
உடனடியாக குடியரசுத்தலைவருக்கு அனுப்ப நேரில் வலியுறுத்தல்
மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவில் பெறும் பொருட்டு ,தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநரை தமிழக முதல்வர் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இச்சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சுகாதாரத்துறைச் செயலர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்". இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.