பாமகவை எப்படியாவது திமுக கூட்டணிக்கு கொண்டுவர படுதீவிரமாக முயற்சிக்கும் துரைமுருகன்?
சென்னை: திமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்த கையுடன் பாட்டாளி மக்கள் கட்சியை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என படுதீவிரமாக முயற்சிக்கிறாராம் துரைமுருகன்.
திமுகவின் பொதுக்குழுவில் அக்கட்சியின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். பேராசிரியர் அன்பழகன் மறைவால் துரைமுருகன் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இல்லாத மாற்றம்... நம்ம பாலு அண்ணனா இது... டி.ஆர்.பாலு பற்றி புளங்காகிதம் அடையும் திமுகவினர்
துரைமுருகன் முயற்சி
துரைமுருகனைப் பொறுத்தவரையில் புதிய கூட்டணிக்கான முயற்சிகளை மேற்கொள்வார் என திமுக சீனியர்கள் பலரும் எதிர்பார்த்தனர். இதன்படியே தமது செல்வாக்கை மேலும் உயர்த்தும் வகையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை துரைமுருகன் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது.
தேமுதிக அதிருப்தி
இன்னொரு பக்கம் அதிமுகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது அதிமுக. அப்போதுதான், திமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்திய உண்மையை ஊடகங்கள் முன்பாக போட்டு உடைத்தார் துரைமுருகன். இதனால் செம கடுப்பாகிப் போன தேமுதிக, துரைமுருகனை திட்டி தீர்த்தது. இன்னமும் இந்த வசவும் நீடிக்கிறது.
பாமகவுடன் துரைமுருகன் பேச்சு
தற்போது துரைமுருகனே, பாமகவுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாமக மூத்த தலைவர் ஒருவரை அண்மையில் துரைமுருகன் சந்தித்தும் பேசியிருக்கிறார். பாமக தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதாம். இந்த நிபந்தனைகளில் சிக்கல் எதுவும் இருக்காது எனவும் துரைமுருகன் உறுதி அளித்தாராம்.
பாமகவுக்காக காத்திருக்கும் கட்சிகள்
வடதமிழகத்தைப் பொறுத்தவரையில் பாமகவை கூட்டணியில் வைத்துக் கொள்ள அதிமுக, திமுக இரு கட்சிகளுமே முயற்சிக்கின்றன. இன்னொரு பக்கம், ரஜினி கட்சி தொடங்கினால் அந்த கூட்டணியில் பாமகவும் இணையவேண்டும் என்பதற்கான முயற்சிகளும் முனைப்பாக இருக்கின்றனர். இருந்தபோதும் பாமக எடுக்கப் போகும் நிலைப்பாடுதான் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.