2 தலைகள்.. 4 மேட்டர்கள்.. அண்ணாமலைக்கு பிடித்த “ஒற்றை இலை”! அதிமுகவில் யாருக்கு ஆதரவு? இதோ“ஹிஸ்ட்ரி”
சென்னை: அதிமுக உட்கட்சிப்பூசல் தொடர் கதையாக போய்கொண்டிருக்க, டெல்லி மேலிடம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவா? ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவா? என்று குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள் இருக்கும் சூழலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மட்டும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
கடந்த ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி நடத்திய அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது.
ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார்.

டெல்லி ஆதரவு யாருக்கு?
இதற்கிடையே டெல்லி ஆதரவு யாருக்கு என்ற கேள்வி தொடர்ந்து பல மாதங்களாக நீண்டுகொண்டே செல்கிறது. கடந்த முறை சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்கு இரண்டு தலைவர்களும் முட்டி மோதினர். அடுத்தடுத்து மாறி மாறி சாதக பாதகங்களை வைத்து இரு தரப்பினரும் தங்களுக்கே டெல்லி ஆதரவு இருப்பதாக கூறி வருகின்றனர்.

அண்ணாமலை
ஆனால், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக இருக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. இதனை மெய்பிக்கும் வகையிலேயே அவரது அடுத்தடுத்த செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.

எடப்பாடிக்கு வாழ்த்து
கடந்த ஜூன் 11 ஆம் தேதி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி அணியினர் கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். அதே கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர். இந்த சூழலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக ஜூன் 23ல் பொதுக்குழு கைவிடப்பட்டபோது இரு தலைவர்களையும் அண்ணாமலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி பயணம்
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் எடப்பாடி பழனிசாமியுடன் சென்றார் அண்ணாமலை. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழ்நாடு பாஜக சார்பில் சந்திப்பது எனக்கு கிடைத்த மரியாதை. நாட்டுக்காக அவர் ஆற்றிய பணிக்கு நன்றி கூறிவிட்டு அவரை வாழ்த்தினேன். பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்தேன். தமிழ்நாடு மக்கள் மீதான பிரதமரின் அக்கறைக்கும் அன்பிற்கும் நன்றி." என்று குறிப்பிட்டு இருந்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
கடந்த செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி பழனிசாமி தொலைக்காட்சி பார்த்தே சம்பவத்தை தெரிந்துகொண்டேன் என்று கூறியது தவறு என குறிப்பிடப்பட்டிருந்ததற்கு, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை நிராகரிப்பதாக அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications