தந்தை பெரியாரை கேடயமாக்கும் பாஜக- இந்தி விவகாரத்தில் 1965-ல் சொன்னதை முன்வைத்து திமுகவுக்கு பதில்
சென்னை: தந்தை பெரியாரை பரமவைரியாக முன்வைக்கும் பாஜக இப்போது திமுகவை விமர்சிக்க அதே தந்தை பெரியாரை கையில் எடுத்து வருகிறது. இந்தி திணிப்பு விவகாரத்திலும் பெரியாரின் சில கருத்துகளை கையில் எடுத்துக் கொன்டு திமுகவை விமர்சிக்கிறது பாஜக.
சென்னை பெரியார் திடலில் மனுஸ்மிருதி தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசியது பெரும் சர்ச்சையானது. மனுஸ்மிருதியில் சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என குறிப்பிடப்பட்டுள்ளது என்பதுதான் ஆ.ராசா பேசியது. இதனை தமிழகம் முழுவதும் பாஜக கடுமையாக எதிர்த்தது.
கலைஞர்போல் வருமா? தொழில்நுட்பத்தால் “எஸ்கேப்”ஆன பொன்னியின் செல்வன் -திமுக எம்பி அப்துல்லா விமர்சனம்
ஆ.ராசா சர்ச்சையும் பாஜகவும்
இது தொடர்பாக விளக்கம் அளித்த ஆ.ராசா, தந்தை பெரியார் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர் பேசிய போதும் இதனை சுட்டிக்காட்டி இருக்கிறார்; பெரியாரின் மரண சாசனம் நூலில் இது இடம்பெற்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். ஆனால் பாஜகவோ, அதே மரண சாசனம் நூலில் திமுகவை விமர்சித்து சில கருத்துகள் தெரிவித்துள்ளார் என பெரியாரை துணைக்கு அழைத்துக் கொண்டு இன்றும் பேசி வருகிறது.
அமித்ஷா குழு இந்தி திணிப்பு
தற்போது இந்தி திணிப்பு விவகாரத்திலும் தந்தை பெரியாரை பாஜக தமது கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவானது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியை கட்டாயமாக்க பரிந்துரைத்தது; வேலைவாய்ப்பிலும் இந்தி படித்தவர்களுக்கு முன்னுரிமை என பரிந்துரைத்தது.
இந்தி பேசாத மாநிலங்கள் போர்க்கொடி- திமுக போராட்டம்
மத்திய அமைச்சர் அமித்ஷா குழுவின் இந்த பரிந்துரைக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா,ஆந்திரா என பல மாநிலங்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன. மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் மாநிலம் தழுவிய பிரம்மாண்ட போராட்டத்தை நேற்று நடத்தினர்.
பாஜக பதில்
இப்போராட்டத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்தப் பள்ளியில் யார் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிக்கைகார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டிவிட்டது கண்டு, எல்லா மக்களும் சிந்திக்காமல் "இந்தி" "இந்தி" என்று இல்லாத ஒன்றை இருக்கிறதாக எண்ணிக்கொண்டு மிரள்வதா?" இதை நான் சொல்லவில்லை, 1965 மே மாதம் ஈ வெ ரா பேசியது இது. (ஆதாரம் : கிளர்ச்சிக்கு தயாராவோம், பெரியார் 1965 மே,28-30, நூல் மூன்றாவது மொழிப்போர் எதற்காக? - தமிழ் முருகேசன்.)
பெரியார் கருத்து
ஆனால், அன்றைக்கு ஈ வெ ரா அவர்கள் பேசியது இன்றைக்கும் பொருந்துகிறது. 'இல்லாத ஹிந்தி திணிப்பை இருக்கிறதாக' தி மு க ஏன் இப்போது மிரட்ட வேண்டும்? ஈ வெ ரா குறிப்பிட்ட பித்தலாட்டக்காரர்கள் யார்? காலிகள் யார்? என்று தி மு க கூறுமா? அதே வேளையில்,ஈ வெ ரா தொடர்ந்து கூறுகிறார் " ஆரம்பத்திலே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த வேலைகளும் இத்தனை உயிர்சேதமும் உடமைச்சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காக சட்டம்? எதற்க்காக போலீஸ்? எதற்காகப் போலீஸ் கையில் தடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளார்கள்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம். எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா? என்று ஈ வெ ரா கேட்டது இன்றைய காலத்திற்கும் பொருந்தும் தானே?. இவ்வாறு நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.