தமிழகத்திற்கு தினசரி 20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு.. பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி
சென்னை: தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டிசிவர் மருந்தை ஒதுக்கீடு செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு அதிகம் ஏற்படும் நபர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க தலைவர் இறந்து விட்டதாக.. வதந்தி பரப்பிய பத்திரிகையாளர் உள்பட 2 பேரை தூக்கிய போலீசார்!
முன்னதாக, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தினசரி 7000 ரெம்டெசிவிர் குப்பிகள் வழங்கி வந்தது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
ரெம்டெசிவிர்
தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் தினசரி ரெம்டெசிவிர் குப்பிகளின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்குக் கூடுதலாக ரெம்டிசிவர் மருந்தை ஒதுக்கீடு செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டாலின் கடிதம்
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கு வழங்கி வரும் ரெம்டிசிவிர் மருந்து ஒதுக்கீட்டு அளவினை உயர்த்தி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையினை ஏற்று நாளொன்றுக்கு 7000 என்ற அளவில் வழங்கி வந்த ரெம்டிசிவர் மருந்தினை தற்பொழுது நாளொன்றுக்கு 20,000 என்ற அளவில் உடனடியாக உயர்த்தி வழங்கியமைக்காக தன் நன்றியினை முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மத்திய அரசுக்கு நன்றி
கொடிய கொரோனா பெரும் தொற்றினை எதிர்த்துப் போராடிடும் இத்தருணத்தில், குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்சிஜன் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை இன்றியமையாதது எனவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் விற்பனை
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க இனி தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகள் மூலமாக ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறை பின்பற்றப்படும் எனத் தமிழக அரசு இன்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.