அந்த கையெழுத்து யாரோடது.. ஜெ. வா? திடீர் விசாரணையை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்.. உடையும் மர்மங்கள்!?
சென்னை: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பின் முழுக்க முழுக்க கொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணிகளை கவனித்து வருகிறது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் முந்தைய அதிமுக அரசு செய்த தவறுகளை விசாரிக்கும் பணிகளும் ரகசியமாக தொடங்கப்பட்டு இருக்கின்றன.
Recommended Video
முந்தைய ஆட்சியில் அதிமுக சார்பாக போடப்பட்ட ஒப்பந்தங்கள், நடத்தப்பட்ட நியமனங்கள், யாருக்கு எல்லாம் பணிகள் கொடுக்கப்பட்டது, எதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பதை விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவு போட்டுள்ளார் என்கிறார்கள். தன்னை சுற்றி மிகவும் நேர்மையான அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் ஸ்டாலின் நியமித்து இருக்கிறார்.
முக்கியமாக முந்தைய ஆட்சியில் அதிமுக அரசின் சில முடிவுகளை வெளிப்படையாக எதிர்த்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர் பொறுப்புகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உள்ளார். இவர்களை வைத்து பல முக்கிய விவகாரங்களை தூசு தட்டி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.. அப்படி ஒரு விவகாரம்தான் ஜெயலலிதா கையெழுத்து!
ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி 2016 அன்று மரணம் அடைந்தார். அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நீண்ட சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவரின் மரணம் தொடர்பாக தனி விசாரணை நடந்து வரும் நிலையில், மரணத்திற்கு முன் 6 மாதங்கள் நடந்த சில விஷயங்களை விசாரிக்கும் முடிவில் புதிய தமிழக அரசு இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
தகவல்கள்
அதன்படி ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்வதற்கு சில வாரங்கள் முன்பும், மருத்துவமனையில் சேர்ந்த பின்பும் அரசின் கோப்புகள் எதிலும் அவர் கையெழுத்து போடவில்லை என்று ஒரு புகார் தற்போது தலைமை செயலகத்திற்கு சென்றுள்ளது. இந்த ரகசிய புகாரை தொடர்ந்து.. தற்போது உள்ள அதிகாரிங்கள் பழைய கோப்புகள் சிலவற்றை சோதனை செய்த போது, அதில் ஜெயலலிதா கையெழுத்து இல்லாமலே, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் கையெழுத்துக்கு பதில் வெறும் ஜெ.ஜெ என்று மட்டும் இனிஷியல் இருந்துள்ளது.
சிக்கல்
அப்போதைய முதல்வரின் கையெழுத்து இல்லாமலே, முக்கிய கோப்புகளுக்கு வெறும் இனிஷியலோடு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதைத்தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக தலைமை செயலகத்தில் சில முக்கிய புள்ளிகளிடம் விசாரித்ததில், ஜெ இறப்பதற்கு சில மாதங்கள் முன்பில் இருந்தே பல கோப்புகளில் முதல்வரின் கையெழுத்தே இல்லை. 2016ல் பல கோப்புகள் இப்படி பாஸ் ஆகி உள்ளது என்கிறார்கள்.
ஒப்பந்தம்
அதிலும் சில டெண்டர்கள், ஒப்பந்தம் எல்லாம் இப்படி பாஸ் ஆகி இருக்கிறது. சில பல கோடி மதிப்பு கொண்டது. இதை எல்லாம் யார் செய்தது, ஜெவிற்கு தெரிந்துதான் இதெல்லாம் நடந்ததா என்று தெரியவில்லை என்றும் கூறுகிறார்கள். அப்போது உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை தொடங்கி உள்ளனர். யாரோ சிலர் முதல்வரிடம் கோப்புகளை காட்டாமல் இப்படி செய்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள்.
மருத்துவமனை
அதே சமயம் இன்னும் சிலரோ.. அது ஜெ கையெழுத்துதான். கடைசி சில வாரங்கள் அவர் இப்படித்தான் கையெழுத்து போட்டார். மருத்துவமனையில் இருந்தே போதும் தொடக்கத்தில் சுயநினைவு இருந்த போது இப்படித்தான் வசதிக்காக கையெழுத்து போட்டார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் ஜெ. ஜெ என்று கையெழுத்து உள்ள பைல்கள் பல, மிக முக்கியமானது என்கிறார்கள்.
மர்மம்
இதனால் இதில் வேறு ஏதாவது மோசடி நடந்து இருக்கலாம் என்று தற்போதைய தமிழக அரசு சந்தேகிக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த கையெழுத்தை போட்டது யார், இதனால் மறைமுகமாக பலன் அடைந்தது யார் என்று விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். தமிழக அரசு பொறுப்பேற்ற பின் பெரிய அளவில் அதிமுகவை நெருக்கவில்லை என்றாலும் மறைமுகமாக சில விசாரணைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. அதில் இந்த விசாரணை முக்கிய திருப்பமாக இருக்கும் என்கிறார்கள் முக்கிய புள்ளிகள்!