அரசு பங்களாவில் தங்க எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி.. பழைய கசப்புகளை மறந்து செயல்பட்ட மு.க.ஸ்டாலின்!
சென்னை: பழைய கசப்புகளை மறந்து அரசு பங்களாவில் தங்க எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளித்ததன் மூலம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை கீரின்வேஸ் சாலையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் அரசு பங்களாக்கள் உள்ளன.
தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கு இந்த பங்களாக்களில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும்.
அரசு பங்களாக்கள்
கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அமைச்சர்கள் இந்த பங்களாக்களில் தங்கி இருந்தனர். தற்போது தி.மு.க ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்களை ஒதுக்கீடு செய்யும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களை காலி செய்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி
தற்போதைய சபாநாயகர் அப்பாவு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர்கள் சேகர்பாபு, கீதா ஜீவன் என பல்வேறு அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கப்டுகின்றன. இந்த நிலையில் தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உரிமை உண்டு
அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி அனுமதி கேட்டு இருந்த நிலையில் அவருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது அமைச்சர் பதவிக்கு நிகரானது ஆகும். அவருக்கு அரசு பங்களாவை பயன்படுத்த முழு உரிமை உண்டு. ஆனால் எதிர்க்கட்சி தலைவருக்கு பங்களாவை ஒதுக்குவது என்பது முதல்வர் முடிவை பொறுத்தது.
கருனாநிதிக்கு இடம்
தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் தந்தையும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு காலமானார். அந்த வேளையில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை சந்தித்த மு.க.ஸ்டாலின் '' பல காலம் தமிழகத்தில் முதல்வராக இருந்த தனது தந்தையின் உடலை சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி மறுப்பு
ஆனால் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி வேறு இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்தார். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் சென்ற ஸ்டாலின், மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதி பெற்றார். கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கசப்புகளை மறந்த ஸ்டாலின்
''என் தந்தை கலைஞருக்கு ஆறு அடி இடம் தர மறுத்தவர் எடப்பாடி பழனிசாமி'' என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் அடிக்கடி கூறி வந்தார். இந்த நிலையில் தற்போது பழைய கசப்புகளை மறந்து அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளித்ததன் மூலம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நெட்டிசன்கள் பாராட்டு மழை
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அரசு பங்காளாவில் தங்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை இருக்கிற போதிலும் இதற்கு மறுப்பு தெரிவிக்க முதல்வருக்கு உரிமை உண்டு. ஆனாலும் எதிர் தரப்பையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் ஸ்டாலின் செயல்பட்டுள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கருணாநிதிக்கு நடந்த சம்பவத்தையும், இதனையும் ஒப்பிட்டு பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.