முஸ்லிம்கள் தொப்புள் கொடி உறவு.. இதுதான் திராவிட மாடல் - ரமலான் விழாவில் நெகிழ்ந்த முதலமைச்சர்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் ரமலான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மிகச்சிறப்பாக இந்த ரமலான் நிகழ்ச்சி எழுச்சியோடு மட்டுமின்றி உணர்ச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
நானும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இந்த மாதம் இஸ்லாமிய பெருமக்களுக்கு புனிதமாக கருதப்படுகிறது.
தஞ்சை தேர் விபத்து: கதறியழுத உறவுகள்... நேரில் ஆறுதல் வழங்கி ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஏழைகளுக்கு உதவும் இஸ்லாமியர்கள்
ரமலான் மாதத்தில் நோன்பிருந்து ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்து கொண்டாடி வருகிறோம். தங்களை வருத்திக் கொண்டு உணவு உண்ணாமல் நோன்பிருந்துகொண்டு இந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த ரமலான் மாதத்தில் செய்யப்படக்கூடிய உதவி மனிதநேயத்தின் மறு உருவமாக காட்சியளிக்கிறது.
திராவிட மாடல்
தமிழ்நாட்டில் உள்ள இந்த மனிதநேயம் நாடு முழுவதும் ஒரு மாடலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இதுவும் ஒருவகை திராவிட மாடல்தான். இதை சொன்னால் பலருக்கு எரிச்சல் வரும், ஆத்திரம் வரும், கோபம் வரும். அதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியது அல்ல. எல்லோருக்கும் எல்லாம்... அனைவருக்கும் உதவி சேர வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை, லட்சியம். அந்த அடிப்படையில்தான் திராவிட மாடல் என்று சொல்கிறோம்.
7 ஆண்டுகளாக ரமலான் நிகழ்ச்சி
கொளத்தூர் தொகுதியில் 2016 ஆம் ஆண்டிலிருந்து இந்த ரம்ஜான் வருகிறபோது உங்களை போன்றவர்களுக்கு இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். 7 ஆண்டாக இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொன்னார். அந்த வழியில் நின்று கலைஞரின் வழிகாட்டுதலோடு எதிர்க்கட்சியாக இருந்தபோதே இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறோம்.
வேறுபாடின்றி உதவி
ஏழை, எளிய மக்களுக்கு சாதி, மத வேறுபாடின்றி நலத்திட்ட உதவிகள், கல்வி உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 24 ஆம் தேதி திமுக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சிறுபான்மை மக்களுக்கு திமுக அரசு என்ன செய்கிறது என்பதை நான் சொல்லிதான் தெரிய வேண்டும் என்பது இல்லை. 2006 ஆம் ஆண்டு நாம் ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக நம்மை பார்த்து மைனாரிட்டி ஆட்சி என்று சொன்னார்கள்.
சி.ஏ.ஏ. எதிர்ப்பு
அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர், இது மைனாரிட்டிகளுக்காக நடைபெறக்கூடிய ஆட்சி என்று சொன்னார். இது தொப்புள்கொடி உறவு. அதிமுக ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் இந்த சமுதாயத்துக்கு எதிராக சட்டம்கொண்டு வரப்பட்டபோது எதிர்த்து போராடினோம். வாக்களித்தோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் சி.ஏ.ஏவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தோம்.
வீட்டு பிள்ளையான திமுக
சிறுபான்மை மக்களுக்கு 3.5% இடஒதுக்கீட்டை அளித்தது திமுக. இன்று டாக்டர்களாக, பொறியாளர்களாக, அரசு அதிகாரிகளாக சிறுபான்மையினர் இருப்பதை கண்டு மகிழ்கிறோம். சிறுபான்மை மக்களுக்கு குரல்கொடுத்த உறவுதான் உங்கள் வீட்டு பிள்ளையான திமுக. திமுக என்றால் அதில் நானும் ஒருவன். நான் எப்போதும் உங்களோடு இருப்பவன். நீங்களும் என்னோடு இருப்பவர்கள். அதுவே திமுக, சிறுபான்மை சமூகம் இடையே இருக்கக்கூடிய நல்லுறவு.