'தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக தி.மு.க ஆட்சி'.. தொண்டர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
சென்னை: தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக தி.மு.க ஆட்சிதான் என்கிற வகையில் திமுக தொண்டர்கள் செயல்பாடு அமைந்திட வேண்டும் என்று என்று முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அண்ணாவின் சாதனைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் அவர் மரியாதை செலுத்தினார்.
என்னாச்சு.. தமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று.. சென்னை மீண்டும் டாப்.. என்ன காரணம்?
முப்பெரும் விழா
இந்த நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தி.மு.க சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முப்பெரும் விழா நடந்தது. காணொளி காட்சி மூலமாக நடந்த இந்த முப்பெரும் விழாவுக்கு தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
விருதுகள் வழங்கி கவுரவிப்பு
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார். அதன்படி பெரியார் விருது மிசா மதிவாணனுக்கு வழங்கப்பட்டது. அண்ணா விருது எல்.மூக்கையாவுக்கும்,
கலைஞர் விருது கும்மிடிப்பூண்டி வேணுவுக்கும் வழங்கப்பட்டது. பேராசிரியர் விருது முபாரக்குக்கும், பாவேந்தர் விருது வாசுகி ரமணனுக்கும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், விழாவில் முரசொலி செல்வம் எழுதிய 'முரசொலி - சில நினைவலைகள்' எனும் நூல் வெளியிடப்பட்டது.
முரசொலியில் வேலை பார்த்தவன்
இதனை தொடர்ந்து விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- பெரியார் என்றால் சமூகநீதி. அண்ணா என்றால் மாநில உரிமை. கலைஞர் என்றால் ஒடுக்கப்பட்டோர் உரிமை.
பாவேந்தர் என்றால் மொழிப்பற்று. பேராசிரியர் என்றால் இனமானம். இதுதான் இந்த இயக்கத்தின் கொள்கை. இன்று முரசொலி குறித்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. நானும் முரசொலியில் சம்பளத்திற்கு
வேலை பார்த்தவன்தான்.. முரசொலி தாளாக இல்லாமல் வாளாக நம் கையில் இருக்கிறது.
தொண்டர்கள்தான் காரணம்
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி நிகழ்ந்துள்ளது. எந்த பலனையும் எதிர்ப்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால்தான் இந்த வெற்றி நமக்கு விளைந்தது. ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் பலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இனி வருகிற ஒவ்வொரு மாதங்களிலும் திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது. கோட்டையில் கையெழுத்திட்டு அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம் மக்களிடம் சென்று சேர உள்ளாட்சி நிர்வாகத்தில் தி.மு.க.வினர் இடம் பிடிப்பது மிகவும் முக்கியமாகும்.
இனி நிரந்தரம்
எனவே 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், அதன்பிறகு வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக 100 சதவீதம் வெற்றி பெற்றாக வேண்டும். இதற்கு உங்கள்(தொண்டர்கள்) முழு உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக தி.மு.க ஆட்சி தான் என்கிற வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.