முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தாக்கம் படுவேகமாக உள்ளது. இதனாலேயே சென்னையில் ஜூன் 30-ந் தேதி வரை 6-வது கட்டமாக லாக்டவுன் முழு அளவில் அமல்படுத்தப்படுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு செயலாளர் தாமோதரன், கொரோனாவால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தாமோதரன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

முதல்வரின் போட்டோகிராபர்
இதேபோல் முதல்வரின் போட்டோகிராபரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. சென்னை மாம்பலம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையில் கொரோனா பாதிப்பு என்பது நாள்தோறும் 1,000க்கும் அதிகமாகவே இருந்து வருகிறது.

மீண்டும் லாக்டவுன்
சென்னையில் கொரோனா மரணங்களும் அதிகரித்தே வருகின்றன. இதனால்தான் சென்னையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் ஜூன் 30-ந் தேதி வரை முழு அளவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் வெளியூர்வாசிகள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

முதல்வர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா
கடந்த காலங்களைப் போல இல்லாமல் இம்முறை லாக்டவுன் படுதீவிரமாக அமல்படுத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலக துணை செயலர், அலுவலக உதவியாளர்கள் 2 பேர் மட்டும் ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

மருத்துவமனையில் அனுமதி
தற்போது அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன்னர். அத்துடன் 4 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள், குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தலைமை செயலகத்தில் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications