அப்பா நான் முதல்வராயிட்டேன்... கருணாநிதி படத்தின் முன் கண் கலங்கிய ஸ்டாலின் - ஆறுதல் சொன்ன அக்கா
முதல்வரான பின்னர் கோபாலபுரம் வீட்டிற்கு சென்று அப்பா கருணாநிதியின் படத்திற்கு முன்பு மலர்தூவி அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் கண் கலங்கிய காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.
சென்னை: அப்பா நான் முதல்வராயிட்டேன் என்று கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் படத்தின் முன்பாக நின்று கண் கலங்கி வழிபட்டார் மு.க ஸ்டாலின். அந்த தருணத்தில் அனைவரும் நெகிழ்ச்சியுடன் நின்றிருக்க, கருணாநிதியின் மகள் செல்வி தனது தம்பியின் கையை பிடித்து ஆறுதல் கூறினார்.
Recommended Video
மு.க ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்புபிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று உச்சரித்து முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின். அவர் பதவியேற்ற அந்த தருணத்தில் கண்களின் ஓரத்தில் ஆனந்த கண்ணீர் கசிய ரசித்தார் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்.
ஒரே டேபிளில்.. ஓபிஎஸ்ஸுடன் அமந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்ட ஸ்டாலின்.. புது கலாச்சாரம்!
ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நிறைவடைந்த உடன் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. விருந்து முடிந்த உடன் காரில் கோபாலபுரத்திற்கு சென்றார் மு.க ஸ்டாலின்.
மு.க ஸ்டாலின் முதல்வர்
சிறுவயதில் இருந்து பிறந்து வளர்ந்த கோபாலபுரம் வீட்டிற்கு முதல்வராக முதன்முறையாக வந்தார் மு.க ஸ்டாலின். அங்கே அவரது தந்தை கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரது கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. இந்த தருணத்தில் தந்தை இல்லையே என்று உருகி நின்றார் மு.க ஸ்டாலின்.
தயாளு அம்மாளிடம் ஆசி
தனது தயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றுக்கொண்டார். வேட்புமனு தாக்கல் செய்த போதும், வெற்றி பெற்ற போதும், பதவியேற்புக்கு முன்னதாகவும் கோபாலபுரம் வந்து ஆசி பெற்றுச் சென்றார். முதல்வராக பதவியேற்ற உடன் இன்று கோபாலபுரம் சென்று அம்மாவிடம் ஆசி பெற்றார்.
உருகி நின்ற ஸ்டாலின்
அப்பா கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு திமுக தலைவராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் இந்த சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார். தனது தாத்தா, தந்தை பெயரையும் சேர்ந்து உச்சரித்து முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். தனது வெற்றியைக் காண தனது தந்தை இல்லையே என்ற சோகத்தில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு முன்பாக கண்கலங்கி நின்றார் மு.க ஸ்டாலின்.
அக்கா செல்வி ஆறுதல்
கண் கலங்கி நின்ற தம்பி ஸ்டாலினின் கைகளைப் பிடித்து ஆறுதல் சொன்னார் சகோதரி செல்வி. அந்த தருணத்தில் குடும்பத்தில் இருந்த அனைவருமே நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில நிமிடங்கள் கோபாலபுரம் இல்லமே அமைதியாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த அனைவரும் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினார். இதனைத் தொடர்ந்து மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார் மு.க ஸ்டாலின்.