மாட்டு மூத்திரம் குடித்து பைத்தியம் பிடிச்சிருச்சு-குடியுரிமை விவகாரத்தில் அமைச்சர் தியாகராஜன் பதில்
சென்னை: தமது இந்திய குடியுரிமை தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பியவருக்கு "மாட்டு மூத்திரம் குடித்து குடித்து பைத்தியம் பிடித்திருக்கு" என காட்டமாக பதில் கொடுத்துள்ளார் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஈஷா யோகா மையம் நடத்தி வரும் ஜக்கிவாசுதேவ் கோரிக்கை. இது தொடர்பாக பேட்டி ஒன்றில், இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் கூறுவது பணம் சம்பாதிக்கும் ஒரு வழிதான் என கடுமையாக விமர்சித்திருந்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
அமைச்சர் தியாகராஜன் விளக்கம்
இது தொடர்பாக திமுகவினருக்கும் ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள் நடந்தன. இதனைத் தொடர்ந்து ஜக்கி வாசுதேவ் குறித்து புது தகவல்கள், நிகழ்வுகள் எழும் வரை அவரைப்பற்றி கருத்து தெரிவிக்கப்போவதில்லை என அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
அமைச்சரின் குடியுரிமை விவகாரம்
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர், தகவல்கள் திரட்டிய வகையில் PTR இந்திய குடியுரிமையை சரண்டர் செய்துவிட்டு , வெளிநாட்டு குடியிரிமை பெற்றுவிட்டார். இப்போது OCI (Overseas citizen of India) card holder. ஒரு OCI card holder சட்டப்படி தேர்தலில் போட்டியிடபக்கூடாது என பதிவிட்டிருந்தார். (இப்பதிவு போடப்பட்ட @Xa9NWgqv73lO3Ix என்ற ட்விட்டர் அக்கவுண்ட் இப்போது நீக்கப்பட்டுள்ளது).
மாட்டு மூத்திரம் குடித்ததால்..
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த முட்டாள்களுக்கு மாட்டு மூத்திரம் குடித்து குடித்து பைத்தியம் பிடித்திருக்கு.....OCI வாக்களிக்க கூட முடியாது விஞ்ஞானி என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும் @maruthi_2010 என்ற நெட்டிசன் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜாவிடம், ஐயா தியாகராஜன் இந்திய குடிமகன் இல்லையென்று செய்திகள் வருகிறதே அது உங்கள் கவனத்திற்கு வந்ததா அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த எச். ராஜா, Wait and see எனவும் பதிலளித்திருந்தார்.
எச்.ராஜா சொன்னது என்ன?
தற்போது அமைச்சர் தியாகராஜன் பழனிவேல் தெரிவித்த பதிலைத் தொடர்ந்து @mannu_talks என்ற நெட்டிசன், எச். ராஜாவுக்கு அனுப்பிய பதிலில், ராஜா சார் வெயிட் பண்ணினது எல்லாம் வேஸ்ட் ஆக போச்சா எனவும் கேட்டுள்ளார்.