நவம்பர் 30ம் தேதி வரை.. வேல் யாத்திரை போகக் கூடாது.. பாஜகவுக்கு அரசு அதிரடி தடை!
பாஜகவினருக்கு யாத்திரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
சென்னை: "வேல் யாத்திரை நடத்துவது தொடர்பான பாஜகவின் 2-வது கோரிக்கையையும் ஹைகோர்ட் நிராகரித்தது. அரசு அனுமதி அளிக்காதபோது, எப்படி யாத்திரை போக முடியும்? அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை கோர்ட் எழுப்பியது. இதனிடையே, கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கிய போதும், நவம்பர் 30 வரை வேல் யாத்திரை செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.
நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தபோவதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.
ஆனால் இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதனால், யாத்திரைக்கு அனுமதி பெறுவதற்காக ஹைகோர்ட்டை நாடியது. ஆனால், கோர்ட்டும் வேல் யாத்திரைக்கு அனுமதி தர மறுத்துவிட்டது.
இருந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி, முருகன் தலைமையில் திருத்தணியில் யாத்திரை சென்று கைதும் ஆனார்கள்.. இதற்கு பிறகு மறுபடியும் வேல் யாத்திரைக்கு அனுமதி கேட்டு ஹைகோர்ட்டில் பாஜக மனு தாக்கல் செய்தது.. இதையடுத்து, யாத்திரை சம்பந்தமாக முழு அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிடப்பட்டது.
அதன்படியே, இன்று டிஜிபியும், தமிழக அரசும் ஹைகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.. அதில், "நடந்த யாத்திரையில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கவில்லை.. பாஜகவினர் மாஸ்க் போடவில்லை.. இவர்கள் யாத்திரை செல்லும்போது, சாலையில் பொதுமக்களுக்கு நிறைய தொந்தரவு ஏற்பட்டது.. பாஜகவினர் சொன்ன மாதிரி, சுய கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்கவில்லை.
முருகன் வேனில் ஏறி கொண்டு, கைகளை அசைத்தும், கட்சி கொடிகளை வைத்து கொண்டும் செல்கிறார்.. இது பாஜகவினர் மேற்கொண்டுள்ள வேல் யாத்திரை, கோவில் யாத்திரை இல்லை, இது அரசியல் யாத்திரை.. முருகன் நிறைய இடங்களில் மாஸ்க் போடவில்லை.. கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கியபோதும், நவம்பர் 30 வரை யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.. மேலும் அன்று பாஜகவினரின் விதிமீறல்கள் தொடர்பான வீடியோ பதிவும் சமர்ப்பிக்கப்பட்டது.
பீகாரில் நமது மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் - ராஷ்டிரிய ஜனதா தளம் ட்வீட்
இதையடுத்து பாஜக தரப்பில் வாதாடும்போது, தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாகவும், எதிர்க்கட்சியினரும் கூட்டங்களை கூட்டுகின்றனர் என்றும் வாதிட்டார்... அதற்கு நீதிபதிகள், "வேல் யாத்திரையால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை மீடியாவில் பார்த்தோம்.. தவறான செயலை நியாயப்படுத்தாதீர்கள்" என்று தெரிவித்தனர்.
இறுதியில், வேல் யாத்திரை தொடர்பான பாஜக-வின் 2-வது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.. தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்? என்று பல கேள்விகளை நீதிபதிகள் கேட்டதுடன், வேல் யாத்திரைக்கு தடை வழங்ககூடாது என்ற மனுவையும் தள்ளுபடி செய்து, வழக்கை டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், போலீசாரின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரவும் பாஜகவுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.