ஆளுநர் ஆர்.என் ரவி பேசியதை இப்படி தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.. தெலுங்கானா கவர்னர் தமிழிசை விளக்கம்
சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் எனக் கூறியிருக்கும் கருத்தின் உட்பொருளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பிரிவினைவாத கருத்துக்கள் அதிகமாக வர ஆரம்பித்துள்ள நிலையில் அவர் அப்படி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டை தனிநாடு என எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிற அர்த்தத்தில் அதை அவர் கூறியுள்ளார் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. நேற்று முன் தினம் ஆளுர் ஆர்.என்.ரவி பேசுகையில், 'விடுதலைப் போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு பிரிவினைகள் நம்மிடையே இருந்தன. இப்போது நமது நாடு ஒரே பாரதம். இதில் அனைவரும் அங்கம்.
பாரதம் என்பது ரிஷிகள், ஆன்மீக இலக்கியங்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் பாரதம் குறித்து யாரும் பேசுவது இல்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது' என்று பேசினார்.

தமிழ்நாடு என்று சொல்வதை விட..
மேலும் அவர் கூறுகையில், " தமிழகத்தில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. ஆனால் சிலர் அமெரிக்காவை போல பல தேசங்கள் இணைந்த நாடாக கருதுகின்றனர். அது தவறு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்" என்று பேசினார்.

நாள்தோறும் சர்ச்சையை உருவாக்குவதாக
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழகத்தில் ஆளும் திமுக கடும் எதிர்வினையாற்றி இருந்தது. திமுக பொருளாளர் டி.ஆர் பாலு ஆளுநரின் கருத்தை கடுமையாக சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் தமிழ்நாட்டுக்குள் நுழைந்து நாள்தோறும் சர்ச்சையை உருவாக்கி வருவதாக விமர்சிக்கப்பட்டு இருந்து.

தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் ஆளுநரின் பேச்சு அரசியல்வாதியின் பேச்சு போல இருப்பதாக விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பாக தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுவந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் எனக் கூறியிருக்கும் கருத்தின் உட்பொருளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தனி நாடு என்று எடுத்துக்கொள்ளகூடாது
தமிழ்நாட்டில் பிரிவினைவாத கருத்துக்கள் அதிகமாக வர ஆரம்பித்துள்ள நிலையில் அவர் அப்படி கூறியிருக்கிறார். பாரத தேசத்தை தன்நாடு என்று எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தனிநாடு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. தமிழ்நாடு தன் நாடு..தன் நாட்டிற்குள் ஒரு தன் நாடு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் தனி நாடு என்று எடுத்துக்கொள்ளகூடாது என்ற அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் சமீப காலத்தில் சில அரசியல் கட்சித்தலைவர்களாக இருக்கட்டும் இயக்கங்களாக இருக்கட்டும் அவர்கள் பிரிவினை பேசுவது அதிகமாகி வருகிறது.

இணைந்துதான் இருக்க வேண்டும்
தமிழ்நாடு தனிநாடு போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. அது தன்நாட்டிற்குள் ஒரு தன்நாடாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் சொல்லி இருக்கிறார் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். நான் தமிழ்நாட்டை சேர்ந்தவள் தான். எனது மொழி தாய் மொழி.. எனது மாநிலம் தமிழ்நாடு.. எனது தேசம் பாரத தேசம். இந்த எண்ணம் இல்லாமல் எந்த விதத்திலுக்ம் எதுவும் துண்டாடப்பட்டு விடக்கூடாது என்பதுதான். துண்டாடப்படுவது கொண்டாடப்பட்டும் விடக்கூடாது. நாம் அனைவரும் இணைந்துதான் இருக்க வேண்டும் என்பதை மறுபடியும் வலியுறுத்தி இருக்கிறார். பாரத தேசத்தில் நாமும் ஒரு அங்கம் தான். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications