சட்ட விரோத குவாரிகள் நடத்துபவர்களுக்கு செக்.. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சட்ட விரோத குவாரிகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு துரோகம் செய்து விட்டனர்.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
குவாரிகள்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு பீளிடர் முத்துக்குமார் சட்டவிரோத குவாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. குவாரிகளை நடத்தி வரும் மீது கனிமவள சட்டம், மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்..
உயர்நீதிமன்றம்
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலானநீதிபதிகள், இது மட்டும் போதாது அவர்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு அவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். பாதிப்பை கணக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர் . மேலும் இந்த வழக்கு விசாரணை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். இதனிடையே சட்டவிரோத குவாரிகளால் ரூ.100 கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு கூறியுள்ளது. 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் வருவாய் இழப்பை வசூலிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள்
இதனிடையே சட்டவிரோத கல்குவாரிகளை மூடுவதுடன் வரும் காலத்தில் இயற்கை வளங்களை அரசாங்கமே கையகப்படுத்தி நடத்தினால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சட்டவிரோதமாக நடத்தப்படும் கல்குவாரிகளை எதிர்ப்போருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக புகார்களும் கடந்த காலங்களில் இருந்தது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள சட்டவிரோத குவாரிகளை அரசு உடனே கணக்கெடுத்து மூட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பெரிய கொள்ளை
ஆட்சிக்கு வந்த சில நாட்களில் கனிம வளத்துறை அமைச்சரான துரைமுருகன் கடந்த ஆட்சியை பற்றி கூறும் போது, கனிம வளத்துறையில் எல்லா இடங்களில் பெரிய அளவில் கொள்ளை நடந்துள்ளது என்று வெளிப்படையாகவே கூறினார். எனவே அவர் கூறியபடி கொள்ளையடித்தவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். அவர்களிடம் இருந்த தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது போல் கடுமையான அபராதம் விதிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.