தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை - சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம், பந்தலூரில் 7 செ.மீ. மழையும், பாரூர், காவேரிப்பாக்கம் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, நெடுங்கல், ஏத்தாப்பூர் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும், தேவாலா, வெம்பாக்கம், திருப்பத்தூர், ஜம்புகுட்டப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும், தாளவாடி, சின்னக்கல்லார், ஆரணி, குமாரபாளையம், நடுவட்டம், பார்வூட் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
திருப்பத்தூர், சூளகிரி, ஈரோடு, தம்மம்பட்டி, தேக்கடி, பையூர், ரெட் ஹில்ஸ், வால்பாறை, சூரங்குடி, கெத்தண்டப்பட்டி, செருமுல்லி ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை - தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்
வானிலை அறிவிப்பு
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும். கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.