கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. உயர்கல்வித்துறைக்கு சிறப்பு திட்டங்கள்.. பட்ஜெட்டில் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் ஆளில்லா விமானக்கழகம் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் மக்களிடையே பல்வேறு எதிர்ப்புகள் நிரம்பி கிடந்தன.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணி முதல் சுமார் 2.30 மணி நேரத்துக்கும் மேலாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

பி.டி.ஆர் அறிவிப்பு
பட்ஜெட்டில் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் உயர்கல்வித்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதனை இப்போது காண்போம். உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

10 கல்லூரிகள் தொடங்கப்படும்
நடப்பாண்டில் தமிழகத்தில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 25 கலை, அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழகம் உருவாக்கப்படும் என்றும் பிடிஆர் அறிவித்தார்.

ஆளில்லா விமான கழகம்
ஆளில்லா விமான கழகமானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் அகில இந்திய அளவில் 27.1% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அது 51.4% ஆக உள்ளது; 17 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

பள்ளி கல்வித்துறை தொடர்பான அறிவிப்பு
இதேபோல் பள்ளி கல்வித்துறைக்கும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ரூ.32,599.54 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மனப்பாட முறையில் இருந்து விலகி சிந்திக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை கல்வியறிவை உறுதி செய்ய ரூ.66.70 கோடியில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடக்கப்படும்.
Recommended Video

ஸ்மார்ட் வகுப்பறைகள்
865 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். 413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் ரூ.13.22 கோடியில் வழங்கப்படும். மலைப்பாங்கான தொலைதூர பகுதிகளில் 12 தொடக்கப்பள்ளிகள் புதிதாக அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications