என்னாச்சு.. முன்னாள் அமைச்சர்களுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் எச்சரிக்கை.. பரபர பேட்டி!
சென்னை: தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து நேற்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாவட்ட தலைநகரங்களில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும், பொங்கல் பரிசுத்தொகையை அறிவிக்க வேண்டும், குடும்ப தலைவிக்கு ரூபாய் 1000 திட்ட வாக்குறுதி, பெட்ரோல், டீசல் விலையில் ரூபாய் 5 குறைப்பு, நீட் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

முன்னாள் அமைச்சர்கள்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் பலரும் திமுக அரசை மிக கடுமையாக வசைபாடினார்கள்.' அதிமுகவினரை தொட்டால் கையை ஒடிப்பேன்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதேபோல் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சிலும் சர்ச்சை மிக அதிகமாகவே இருந்தது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றிய பேசிய அவர் ''திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லாமல் இருக்கிறது. கொலைகள், பாலியல் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இவற்றை தடுக்க வேண்டிய தமிழக டிஜிபி டி.ஜி.பி சைலேந்திரபாபு சைக்கிள் ஓட்டுகிறார். சைக்கிள் ஓட்டுவதுதான் அவருக்கு வேலையா' என்று கடுமையாக தாக்கினார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி
மேலும் அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி ஆகியோரையும் மறைமுகமாக கடுமையாக விமர்சித்து பேசினார் சி.வி.சண்முகம். இந்த நிலையில் இத்தகைய பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கவும் வகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, ''அதிகாரிகள்- போலீசாரை ஒருமையில் பேசினால் அரசு வேடிக்கை பார்க்காது'' என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில், 'கடந்த 5 ஆண்டுகளில் கோவையில் எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நிகழ்ச்சிகளும் நடத்த முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தார்கள்.

ஒருபோதும் வேடிக்கை பார்க்காது
போராட்டம் நடத்திய பலரையும் கைது செய்தனர், ஆனால் இப்போது இந்த கட்டுப்பாடுகளை மீறி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இதேபோல் நேற்று தங்கள் இஷ்டத்துக்கு பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு இருக்கின்றார்கள்.அரசு அதிகாரிகளை, காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுவதை தமிழக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது' என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

யாரும் தப்ப முடியாது
''கடந்த கால ஆட்சியில் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்கள், ஊழல் செய்து இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தோம். அதன் பேரில்தான் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் தவறு செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் யாரும் தப்ப முடியாது'' என்றும் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications