ஜெ. பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் - அமைச்சர் பொன்முடி
சென்னை: ஜெயலலிதா பல்கலைக்கழகம் உட்பட 4 மாவட்ட கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்து அறிவிப்பு வெளியாகி, விழுப்புரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிராக வெறுமென தொடங்கப்பட்டது. அதற்கென எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஒரே ஒரு துணை வேந்தர் மட்டுமே நியமிக்கப்பட்டார். பதிவாளர், பிற அதிகாரிகள் என யாருமே நியமிக்கப்படவில்லை.
பெயரளவு தொடங்கப்பட்ட ஜெ. பல்கலைக்கழகம் தனித்து செயல்பட முடியாது. முன்னாள் தாலுகா அலுவலகத்தில் தான் தற்போது ஒரு பெயர்ப் பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஜெ.சட்டப்பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்ததை தவிர நிதி ஒதுக்கீடோ வேறு ஏற்பாடோ செய்யப்படவில்லை
பல்கலைக்கழகம் பெயரளவுக்கு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் எந்த செயல்பாடுகளும் நடத்தப்படவில்லை என்பது ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் தெரியும். அண்ணாமலை பல்கலைகழகம் கூட்டு பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனிப் பல்கலைக்கழகமாகச் செயல்படுவதால், தன்னுடைய ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. அதனுடன் இவற்றை இணைப்பதன் மூலம் நிதிச்சுமையும் குறையும்.
எனவே அவர்களின் கோரிக்கைகளையும் ஏற்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கூட்டு பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். அவ்வாறு மாற்றி அதில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டக் கல்லூரிகளும் இணைக்கப்படும். இதன் மூலமாக பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட வழி ஏற்படும் என்று பொன்முடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications