அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு - சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்காக இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. தினந்தோறும் 250 பேர் என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்த திட்டமிட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளில் சேர பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் சிறப்பு மையங்கள் வாயிலாகவும் கடந்த 27ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 115 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
பொறியியல் படிப்பில் https://tneaonline.org/ சேர என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் இதற்கான கால அவகாசம் கடந்த மாதம் 19ஆம் தேதி முடிவடைந்தது. இருப்பினும் சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு முடிவுகள் கடந்த 22ஆம் தேதி வெளியானதால் பொறியியல் படிப்புகளில் சேர 27 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்காக இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. சுமார் 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடைபெறுகிறது.
விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க 2042 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 250 பேர் என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்த திட்டமிட்டுள்ளது. விளையாட்டு பிரிவுக்கு விண்ணப்பித்த சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இதில் பங்கேற்கும் மாணவர்கள், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் ரேண்டம் எண்ணும், தர வரிசை பட்டியலும் வெளியாகும். அதன் பின்னர் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440 க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள 1.50 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆகஸ்ட் 16முதல் அக்டோபர் 14ஆம் தேதிவரை நடத்தப்பட உள்ளது.
பொறியியல் படிக்க 2,11,905 மாணவர்கள் விண்ணப்பம்..சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி நாள்