20 தொகுதி இடைத் தேர்தல்.. தேமுதிகவுக்கு இது நல்ல வாய்ப்பு.. தமிழகத்தை தன் பக்கம் திருப்புமா?
பிரேமலதா, விஜயபிரபாகர் தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
சென்னை: தமிழக அரசியலையே அசைத்து பார்க்க கூடியதாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை தேமுதிக தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளுமா?
தேமுதிக ஆரம்பிக்கப்பட்டு 14 வருடங்கள் ஆகிவிட்டது. விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதனின் சினிமா கவர்ச்சி மற்றும் மனிதநேயம் கலந்த உதவிகள் அவரை ஆட்சி ஆரம்பத்த உடனேயே உச்சாணி கொம்பில் தூக்கி வைத்து விட்டது. எத்தனையோ முரண்பாடுகள், சலசலப்புகள், விமர்சனங்களை விஜயகாந்த் எதிர்கொள்ளவும் செய்தார். அதே சமயம் பட்டிதொட்டிகளிலும் தேமுதிக விரைந்து பரவியது.

2 முக்கிய முடிவுகள்
தற்போது விஜயகாந்த்தின் தள்ளாமை அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. எனினும் வீழ்ந்து கிடக்கும் தூக்கி நிறுத்தவோ, ஒருங்கிணைக்கவோ, வலுப்படுத்தவோ, பலப்படுத்தவோ, பழுது பார்க்கவோ யாருமே இல்லாத நிலை ஏற்படவும் தொடங்கியது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜயகாந்த் 2 முக்கிய முடிவுகளை எடுத்தார்.

பொருளாளர் பிரேமலதா
ஒன்று, தனது மூத்த விஜயபிரபாகரனை அரசியல் களத்தில் இறக்கி விட்டது. இரண்டு, பிரேமலதாவை, கட்சியின் பொருளாளராக உயர்த்தியது. விஜயபிரபாகரன், விஜயகாந்த்தின் மகன் என்ற ஒரு தகுதியுடன் உள்ளே நுழைந்தாலும், மக்கள் ஆதரவை எளிதாக வெல்வார் என்ற எதிர்பார்ப்பு தேமுதிகவினருக்கு நிறைய இருக்கிறது. அதேபோல, தேமுதிகவின் வளர்ச்சியில் பிரேமலதாவின் பங்கு இல்லையென்று சொல்லிவிட முடியாது.

மக்கள் பிரச்சனைகள்
ஆனால் மற்ற கட்சிகளின் களப்பணிகள் போல தேமுதிக பெரிதாக இறங்குவதில்லை என்பது பரவலான கருத்தாக உள்ளது. கட்சி சார்பில் ஒரு கட்டம் நடத்தப்படும், அதற்கு ஆட்கள் திரண்டோ அல்லது திரட்டப்பட்டோ வருவார்கள், கூட்டம் முடிந்து கலைந்து செல்வார்கள். இப்படித்தான் நடந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையைத்தான் அக்கட்சி மாற்ற முயல வேண்டும். இனி மக்கள் பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும், தங்களுக்கான கூட்டத்தை சேர்க்க பாடுபட வேண்டும்.

பகிரங்க வேண்டுகோள்
மக்களை நாம் எந்த அளவுக்கு அணுகுகிறோமோ அந்த அளவுக்கு மக்களும் நம்மை நெருங்கி வருவார்கள் என்பதுதான் கடந்த கால அரசியல் தந்த பாடங்கள். தற்போது தமிழகத்தில் பிரச்சனைகளுக்கு பஞ்சமே இல்லை. விஜயபிரபாகரன், இளைஞர்களை திரட்டி, அவர்களை கொண்டு மக்கள் பிரச்சனைகளை கையாளவும் முயல வேண்டும். "இளைஞர்கள் எல்லாம் எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள்" என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்த விஜய பிரபாகரன், களப்பணியில் தற்போதிலிருந்தே ஈடுபட்டால்தான் தேமுதிகவை தூக்கி நிறுத்த முடியும்.

ஒத்துழைப்பு இல்லை
அது மட்டும் அல்லாமல், தன் அப்பா கட்சி என்ற மிதப்பு வந்துவிடாமல், அடி மட்ட தொண்டனாகவே தன்னை நினைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம், என்று மக்களை அணுகினால்தான், நாளை எந்த கட்சியும் கூட்டணிக்கு அழைக்கும் நிலைமை உருவாகும். அதேபோல, ஒரு பொது பிரச்சனைக்குகூட தேமுதிக மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படாதது வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது. உதாரணத்திற்கு ஒரு நீட் தேர்வுக்கு எல்லோரும் சேர்ந்து போராடினால், தேமுதிக அதற்கு ஒத்துழைப்பு தருவது இல்லை.

இணக்கம் வேண்டும்
எனவே மக்கள் பிரச்சனைக்காக கூட மற்ற கட்சிகளுடன் இணக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் மனோபாவத்தை உடைத்தெறிய வேண்டும். அதிமுக, திமுகவுக்கு பலம் வாய்ந்த கட்சியாக, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் 2-வது கட்சியாக உயர்ந்த அதே தேமுதிகவை உயர்த்த தமிழகம் தந்த இந்த நல்ல வாய்ப்பினை இனியாவது தேமுதிக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

விஜயகாந்த் மேல் பாசம்
எல்லாவற்றிற்கும் மேலாக தேமுதிக மேல் மக்களுக்கு அதிக அளவு இன்னமும் மதிப்பும், மரியாதையும் இருக்கிறதென்றால், அதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் மேல் உள்ள பாசமும், 14 வருடங்களாக எந்த வித ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத கட்சி என்ற பெயரும் கிடைத்துள்ளது. இந்த நற்பெயர் பெரும்பாலான கட்சிகளுக்கு தற்போது இல்லை. எனவே இதை தேமுதிக பயன்படுத்தி கொண்டு வரப்போகும் தேர்தலில் தனித்தோ, அல்லது பலம் வாய்ந்த் கூட்டணிகோ தங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!












Click it and Unblock the Notifications