கிட்ட மட்டும் போயிடாதீங்க சார்.. செஞ்சுரி அடிக்க போகும் தக்காளி! போன வருஷம் கண்ணு முன்னாடி வருமே!
சென்னை : வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி இன்று 65 ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில், சில்லறை விற்பனை கடைகளில் 90 ரூபாய் வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஏப்ரல் மே மாதத்தை விட செப்டம்பர் அக்டோபரில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் புரட்டாசி மாதத்தில் எதிர்பார்த்த மழை அளவு இல்லை.

இதனால் பகல் நேரங்களில் கோடை வெப்பத்தை விட வெயில் அதிகமாகவே இருக்கிறது. காலை முதல் இரவு வரை வெப்பம் கொளுத்தி எடுக்கும் நிலையில் சில நிமிடங்கள் கூட மழை பெய்வதில்லை. அப்படியே பெய்தாலும் புழுக்கம் காரணமாக மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது. இது குறிப்பாக விவசாய நிலங்களில் தண்ணீர் இல்லாததால் காய்கறிகள், பூக்கள், தென்னை மரங்கள் உள்ளிட்டவை கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால் அவற்றை வெட்டி விறகுக்காகவும் செங்கல் சூளைகளுக்கும் விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் தேனி, திண்டுக்கல், நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல், காய்கறி, வாழை உள்ளிட்ட உணவு பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளும் கடும் இன்னலை சந்திக்கின்றனர்.
இதனால் போதிய அளவு காய்கறி உற்பத்தி இல்லாததால் புகழ்பெற்ற திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளுக்கு காய்கறி வரத்து வெகுவாக சரிந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து வருவதால் விவசாயிகள் கடும் இன்னலை சந்தித்து இருக்கின்றனர்.
வழக்கமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 110 லாரிகளில் தக்காளி வரும் நிலையில், தற்போது 60 முதல் 75 லாரிகள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. மேலும் வெயில் மற்றும் மழை என மாறி மாறி வருவதால் தக்காளி பழங்கள் செடியிலேயே வெதும்பி விடுகின்றன. மேலும் பூச்சி தாக்குதலால் தக்காளி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 35 ரூபாய் வரை விற்பனையான நிலையில் இன்று 65 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை ரகத்திற்கு ஏற்ற தரத்திற்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 50 வரை விற்பனையான நிலையில் இன்று 80 ரூபாய் வரை விற்பனையாகிறது.
காய்கறி சந்தையில் இருந்து தக்காளியை வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்யும் வியாபாரிகள் 90 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக விரைவில் தக்காளி விலை நூறு ரூபாயை தாண்டும் என கூறப்படுகிறது. இதே போல் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் முதல் தர சின்ன வெங்காயம் 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையும், பெரிய வெங்காயம் 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications